இயற்கை வழிபாட்டு முறையில் பாம்பு புற்றினை வழிபடுவது பழங்காலம் முதலே இருந்து வருகிறது. நாகப்பாம்பினை அம்பிகையின் அம்சமாகக் கருதி வணங்குவர். அம்மன் கோயில்களில் நாகமே காவல் புரிவதாகவும், அம்பிகையின் குடையாக இருப்பதாகவும் கூறுவர். மாரியம்மன் கோயில்களில் உள்ள புற்றினை புற்று மாரியம்மன் என்று குறிப்பிடுவர். ஆடி செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மனை வழிபட்டு புற்று மண்ணையே பிரசாதமாக நெற்றியில் பூசிக் கொள்வர். ஆடிமாத வளர்பிறை சதுர்த்தியான நாகசதுர்த்தியில் புற்றுக்கு பால் விட்டு பொங்கல் வைத்தால் நாக, சர்ப்ப தோஷம் நீங்கி நன்மை உண்டாகும். இந்த ஆண்டு ஜூலை 31ல் நாகசதுர்த்தி வருகிறது.