கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டும் வணங்க வேண்டும். தனித்தனியாக கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடி மரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும். மூலவர் கிழக்கு, மேற்கு நோக்கி இருக்கும் கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்து இருக்கும் கோயில்களில் கிழக்குப் பார்த்து தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு, மேற்கு நோக்கி தலை வைத்து வணங்குவது கூடாது. சிவன்மீதுள்ள ஸ்லோகம் ஒன்றில் அதன் ஆசிரியர், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடுகிறார். “ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமால் இருக்கப் போவது,” என்கிறார். முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால் இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று விளக்கம் அளிக்கிறார்.