இத்தாலியில் மைக்கேல் ஏஞ்சலோ என்ற சிற்பி இருந்தார். ஒருநாள் கடைத்தெருவில் உள்ள கடையின் முன் நீளமான சலவைக்கல் ஒன்றைக் கண்டார். “ஐயா! இந்த கல்லின் விலை என்ன?” எனக் கேட்டார், “ஐயா! இந்தக் கல் வருவோருக்கு இடைஞ்சலாகத் தான் கிடக்கிறது. பணம் ஏதும் தர வேண்டாம். இங்கிருந்து கல்லை அகற்றுவதே எங்களுக்கு உதவி தான்” என்றார் கடைக்காரர். மைக்கேல் ஏஞ்சலோவும் கல்லுடன் புறப்பட்டார். சில மாதம் கழித்து கடைக்காரரை வீட்டுக்கு வரவழைத்து, அழகான சிற்பத்தைக் காட்டினார். இயேசுவை மடியில் தாங்கிய மாதா சிலை அது. அதன் அழகை புகழ்ந்தார் கடைக்காரர். “ஐயா! நீங்கள் இலவசமாக கொடுத்த கல்லில் வடித்த சிற்பம் இது. பயனற்றது என்று உலகில் ஏதுமில்லை. ஒவ்வொரு பொருளுக்கு உள்ளேயும் கலையம்சம் பொதிந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் அறிவையும் ஆண்டவர் அளித்திருக்கிறார். நாம் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்,” என்றார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது உண்மை தானே!