வசிஷ்ட முனிவர், பகவான் கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டு தினமும் வெண்ணெய் நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம். வசிஷ்டரைச் சோதிக்க நினைத்த கண்ணன், ஒரு நாள் சிறுவனாக வடிவம் எடுத்து வந்துஅன்றைய நைவேத்தியத்துக்காக வசிஷ்டர் வைத்திருந்த வெண்ணெய் முழுவதையும்தின்று தீர்த்து விட்டார், இதைத் தற்செயலாகக் கவனித்துவிட்ட வசிஷ்டர், “ஏய் யாரது?” என்று உரக்கக் குரல் கொடுத்தபடி சிறுவனைப் பிடிக்க முயற்சித்தார்.
கண்ணன் குடுகுடுவென ஓட, வசிஷ்டர் துரத்தினார். அப்போது அந்தப் பகுதியில் தவம்செய்து கொண்டிருந்த ரிஷிகள் சிலர், ஓடுவது இறைவனே என அறிந்து தங்களது தவவலிமையால் கண்ணனைப் பாசக் கயிற்றால் கட்டிப் போட, கண்ணனும் அவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு அதே இடத்தில் நின்றார். பின்னால் ஓடி வந்த வசிஷ்டரும், உண்மையை உணர்ந்து, கிருஷ்ணனின் பாதங்களைப் பக்தியுடன் பற்றிக் கொண்டார். வசிஷ்டர் மற்றும் அங்கிருந்த முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று கண்ணன் அங்கே யே கோயில் கொண்டான். பக்திக்குக் கட்டுண்ட கண்ணன், நின்ற அந்தத் திருவிடம் திருக்கண்ணங்குடி ஆயிற்று. திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ., தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.