பதிவு செய்த நாள்
27
நவ
2019
12:11
சபரிமலை: வி.ஐ.பி., தரிசனத்தில் போலீசாருக்கும், தேவசம் போர்டு ஊழியர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுகின்றன. தேவசம் போர்டு காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை சன்னதி முன், தேவசம் போர்டின் காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் வரும் போது, சுவாமி கும்பிட வசதி செய்து தருவர். இதற்கு நீதிமன்ற அனுமதியும் உள்ளது. இந்நிலையில், சன்னிதான போலீஸ் தனி அதிகாரியின் உறவினர் வந்த போது, அவரை கூடுதல் நேரம் நிற்க விடவில்லை. இதனால், எஸ்.ஐ., மற்றும் தேவசம் போர்டு காவலர்கள் இதற்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேவசம் போர்டு அதிகாரி ராஜேந்திர பிரசாத், போலீஸ் தனி அதிகாரியிடம் பேச்சு நடத்தினார். பின், அந்த இரண்டு ஊழியர்களும், அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது, தேவசம் போர்டு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வதந்தி குறித்து விசாரணை: சில நாட்களாக சமூக வலைதளங்கள், சில மலையாள இதழ்களில், அரவணையில் பல்லி என செய்திகள் வெளியாகின. தேவசம் போர்டு இதை கடுமையாக மறுத்துள்ளது.அதன் தலைவர் வாசு கூறியதாவது:மிகவும் பாதுகாப்பான முறையில், அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அரவணை தயாரிக்கப்படுகிறது. பல்லி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட எந்த உயிரினங்களும் தயாரிக்குமிடத்திற்குள் செல்ல முடியாது. ஒவ்வொரு கட்டத்திலும், உணவு பாதுகாப்புத் துறை, தர பரிசோதனை செய்து உறுதி செய்கிறது.இவை எல்லாம் முடிந்த பின்னரே, அரவணை டின் விற்பனைக்கு வருகிறது. அரவணையில் பல்லி இருந்ததாக பரப்பப்படும் செய்தி, பக்தர்கள் வருகையை தடுக்க நடக்கும் சதியே. இதன் பின்னணி என்ன, உருவாக்கியது யார் என, போலீஸ் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதய நோயாளிகளுக்கு டாக்டர்கள் அறிவுரை: சபரிமலையில் மண்டல சீசன் துவங்கி, 10 நாட்கள் கடந்த நிலையில், மாரடைப்பால், 34 பேர் சன்னிதானம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதில், ஐந்து பேர் இறந்தனர்; 29 பேர் காப்பாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு சீசனில், 173 பேர் சிகிச்சை பெற்றதில், 24 பேர் இறந்தனர். இதையடுத்து, பம்பை முதல் சன்னிதானம் வரை, 24 மணி நேரமும் இயங்கும், ஐந்து இதய நோய் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு, இதய நோய் கிசிக்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பின், ஆம்புலன்ஸ் மூலம் பத்தணந்திட்டை, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இது குறித்து, சிகிச்சை மையங்களில் உள்ள டாக்டர்கள் கூறியதாவது:பொதுவாக இதய நோய்க்கு மருந்து சாப்பிடுவோர், கண்டிப்பாக சபரிமலை வரும்போதும் மருந்து சாப்பிட வேண்டும். மருத்துவ குறிப்புகளை கையில் வைத்திருக்க வேண்டும். இது, சபரிமலையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். பயணம் தொடங்கும் முன், சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். மிகமிக மெதுவாக மலையேற வேண்டும். முடியாதவர்கள், டோலியில் வரவேண்டும். அசாதாரண நிலை தோன்றினால், பக்கத்தில் உள்ள மருத்துவ உதவி மையத்துக்கு செல்ல வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.