பதிவு செய்த நாள்
04
டிச
2019
11:12
சபரிமலை : சபரிமலை சன்னிதானத்தில், நான்கு இடங்களில், இ - காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள், தங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்தலாம். சபரிமலையில் கடந்த சீசனை விட, இந்த சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, வருமானம் உயர்ந்துள்ளது. 15 நாட்களில் வருமானம், 50 கோடி ரூபாயை கடந்துள்ளது.பக்தர்கள் வசதிக்காக, சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இ - காணிக்கை வசதி, மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சன்னிதானத்தின் முன்புறம் மகா காணிக்கை, கோயில் திருமுற்றத்தில் இருந்து மாளிகைப்புறம் கோவில் செல்லும் பாதை, அன்னதான மண்டபம், திருவிழா கட்டுப்பாட்டு அலுவலகம் ஆகிய இடங்களில், இ - காணிக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கிரெடிட்-,டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, தேவசம் கணக்கில் பணம் செலுத்தலாம்.இதற்கான ரசீது உடனடியாக வழங்கப்படும். பக்தர்களின் காணிக்கை, உடனடியாக தேவசம் போர்டு கணக்கில் சென்றடைவதுடன், பக்தர்கள் அதிக அளவில் கரன்சியை பாதுகாத்து கொண்டு வரவேண்டியதில்லை.பிளாஸ்டிக் சேகரிப்புசபரிமலை காடுகளை பாதுகாக்க, பிளாஸ்டிக்கை தவிர்க்க குடிநீர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, பெருமளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.
ஆனாலும் உணவு பொருட்கள் பேக்கிங் கவர்கள், இருமுடி பையில் கொண்டு வரும் பூஜை பொருட்களின் பாலிதீன் கவர்கள் சவாலாகவே உள்ளது.உணவு பொருட்களின் பேக்கிங் கவர்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே, வெளியில் வீசப்படுகிறது. இது, காடுகளை பாதிக்கிறது.இவற்றை சேகரித்து, மறுசுழற்சி செய்ய, மிஷன் கிரீன் சபரிமலை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை பாதையில், பல இடங்களில், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.வனத்துறையின் சுற்றுச்சூழல் காவலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சேகரிக்கும் கழிவுகளை திருவல்லாவை சேர்ந்த நிறுவனம், மறுசுழற்சிக்காக எடுத்து செல்கிறது. பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகம், இந்த திட்டத்தை கண்காணிக்கிறது. விழிப்புணர்வு நடவடிக்கையால் பிளாஸ்டிக் குறைந்தாலும், முழுமையாக தவிர்க்க, பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.