பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
நுட்பமான மதி கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
சூரியன் நற்பலனை வாரி வழங்குவார். சுக்கிரன் மார்ச் 28 வரையும், புதன் ஏப்.1க்கு பிறகும் நன்மை தருவார்கள். குரு மார்ச் 27வரை சாதகமான நிலையில் இருந்து நற்பலன் தருவார். அதன் பிறகு அவர் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சுமாரான இடம்தான். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்துப்பார்வை சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருள்கள் வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். நினைத்த செயல் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் கெட்டி மேளம் கொட்டும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் மார்ச் 27க்குள் கைகூடும்.
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். வசதி வாய்ப்பு பெருகும். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஏப்.1க்கு பிறகு மறையும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். பெண்களுக்கு வாழ்வில் குதுாகலம் அதிகரிக்கும் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஏப்.1க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காணலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். நண்பர்களால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ராகுவால் அக்கம்பக்கத்தினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். வெளியூரில் தங்க நேரிடலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். மார்ச் 23க்கு பிறகு சற்று கவனம் தேவை. ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஏப்.1 க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகள் அதிக லாபத்தை பெறுவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். ஏப்.1க்கு பிறகு தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.
* தரகு,கமிஷன் தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் வரும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு குருபலத்தால் உயர்வு உண்டாகும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஏப்.1க்கு பிறகு உங்களின் முன்னேற்றத்திற்கு பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
* ஐ.டி.,துறையினருக்கு ஏப்.1க்கு பிறகு கூடுதல் நன்மை கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் ஏப்.1க்கு பிறகு சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். கோரிக்கைகளை மார்ச் 27க்குள் கேட்டு பெறுவது நன்மையளிக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* கலைஞர்களுக்கு ரசிகர்களிடம் புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.
* விவசாயிகளுக்கு மஞ்சள், நெல், கேழ்வரகு போன்ற தானிய வகைளில் மகசூல் அதிகரிக்கும். பழவகைகள், கீரை வகைகளில் எதிர்பார்த்த வருமானம் வரும். ஏப்.1 க்கு பிறகு கால்நடைச்செல்வம் பெருகும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் ஏப். 1 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி காணலாம். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
சுமாரான பலன்கள்
* மருத்துவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தொழில் விஷயமாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
* ஆசிரியர்களுக்கு மார்ச் 27க்கு பிறகு திடீர் இடமாற்றம் வரலாம். சிலருக்கு மன வேதனை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு, வீண் விரோதத்திற்கு ஆளாகலாம்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்படலாம்.
* கலைஞர்கள் மார்ச் 28க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக அமையும்.
நல்ல நாள்: மார்ச் 15,16,17,18,24,25,26,27,28,31 ஏப்.1,5,6,11,12,13
கவன நாள்: மார்ச் 19,20 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்:
* வெள்ளிக்கிழமையில் நாக தேவதை வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
* சனிக்கிழமை அனுமனுக்கு துளசி அர்ச்சனை