பதிவு செய்த நாள்
17
அக்
2020
07:10
கார்த்திகை 2, 3, 4ம் பாதம் : மாதத்தின் துவக்கத்தில் சற்று போராட்டமான சூழலைக் காண்பீர்கள். ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள ராகு செயல்வேகத்தைத் துாண்டுவார். எனினும் ராசிநாதன் சுக்கிரனின் சாதகமான சஞ்சாரம் மனதில் மகிழ்ச்சியை குடிகொள்ளச் செய்யும். மனதில் இருக்கும் வேதனைகளை முகத்தில் வெளிக்காட்டாது இன்முகத்துடன் செயல்படுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். குடும்பத்தினரோடு அவ்வப்போது லேசான கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்படுவர். வாகன சுகம் உண்டு. நெடுநாட்களாகக் காத்திருந்த வெளியூரில் செய்து முடிக்க வேண்டிய பணியைச் செய்து முடிக்க வாய்ப்பு அமையும். குடியிருக்கும் வீட்டினை அழகுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வளர்ப்பு பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு கூடிவரும். மனதிற்குப் பிடித்தமான சம்பவம் நடந்தேறக் காண்பீர்கள். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் வீண் விவாதம் காரணமாக கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்கள் வழியில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். சிக்கனத்தைக் கடைபிடிப்பதாக நினைத்து கூடுதலாக செலவழிப்பீர்கள். பெற்றோரின் உடல்நிலையிலும் மனநிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம். பணியாளர்கள் அலுவலகத்தில் பணிச்சுமையைச் சந்திப்பர். சுயதொழில் புரிவோர், வியாபாரிகள் அகலக்கால் வைப்பது கூடாது. எதிர்பார்க்கும் ஆதாயம் பெற சிறிது காலம் காத்திருப்பது அவசியம். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் பகலில் செய்ய வேண்டிய பணிகளில் பாதிப்பு உண்டாகலாம். நன்மை தரும் மாதமே.
பரிகாரம்: நாகாபரணம் சூடியிருக்கும் சிவனை வழிபடுங்கள்.
ரோகிணி : இந்த மாதத்தில் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதால் முகமலர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பேச்சுத்திறமையின் மூலம் நினைத்ததை சாதிக்க முயற்சிப்பீர்கள். உங்கள் வார்த்தைகள் அடுத்தவர்களை கவரும் விதத்தில் அமையும். குடும்பத்தினரோடு சந்தோஷமாக பொழுதைக் கழிப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் ஈடுபாடு கொள்வீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நீண்ட நாள் கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்காக அதிக பணம் செலவழிக்கலாம். வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர் சாமான்கள் சேரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு. வாகன சுகம் நன்றாக இருப்பதால் வெளியூர் பிரயாணத்தில் சுகம் காண்பீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. எதிரிகளையும் நண்பர்களாக மாற்றம் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் வழியில் லேசான ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். அவர்கள் மூலமாக அதிக செலவு உண்டாகலாம். போலியான ஆன்மிகவாதிகளை அடையாளம் காண வேண்டியது அவசியம். பெற்றோருடன் லேசான கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அலுவலகத்தில் பிரச்னையான சூழலின்போது உங்கள் நகைச்சுவை நிறைந்த பேச்சின் மூலம் நிலைமையை சமாளிப்பீர்கள். வியாபாரிகள், சுயதொழில் புரிவோர் தொழில்முறையில் இருக்கும் சங்கடங்களை மறந்து உற்சாகத்துடன் செயல்படுவர். வருமானம் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம். கனவுத்தொல்லையால் உறக்கம் கெடும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் மாதம் இது.
பரிகாரம் : வெள்ளிக்கிழமையில் கோமாதாவை வழிபடுங்கள்.
மிருகசீரிடம் 1, 2ம் பாதம் : இந்த மாதத்தில் கடுமையான அலைச்சலுக்கு ஆளாவீர்கள். அதிகமாக அலைய நேர்ந்தாலும் வெற்றி என்பது சாத்தியமாகும். ஒரு பணியைச் செய்து முடிக்க ஒரு முறைக்கு இருமுறையாக பணியாற்றி வேண்டியிருக்கும். ஆயினும் இறுதியில் வெற்றி என்பது சாத்தியமே. நாம் நினைக்கும் செயல் நடக்காமல் தாமதமாகும் பட்சத்தில் அதிக கோபத்திற்கு ஆளாவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி நிதானித்து யோசித்தீர்களேயானால் வெற்றி நிச்சயம். குடும்பத்தினரின் பணிகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் எளிதில் களைப்படைவீர்கள். அவரவருக்கு உரிய பணியை அவரவரிடம் ஒப்படைப்பது நல்லது. உங்கள் நட்சத்திரக் காலில் சஞ்சரிக்கும் ராகு செயல்வேகத்தைத் துாண்டுவார். முன்பின் யோசிக்காமல் அவசரப்பட்டு செய்யும் செயல்களால் அவ்வப்போது சிரமம் ஏற்படலாம். உங்களுடைய பேச்சு மற்றவர் மத்தியில் சிறப்பான கவுரவத்தைப் பெற்றுத் தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் முயற்சிப்பீர்கள். சேமிப்பு உயர்வடையும். உடன்பிறந்தோருடன் இணக்கமான சூழல் நிலவும். வாகனங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது அவசியம். நவம்பர் மாதம் 12க்குப் பின் பிள்ளைகளின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும். புதிய வீடு அல்லது மனை வாங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். டஸ்ட் அலர்ஜி, தும்மல், சளி, காய்ச்சல் தொந்தரவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். உடல்நலனில் கவனம் கொண்டு வெளியில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது கருத்துவேறுபாடு தோன்றி மறையும். கடன் கொடுக்கல் வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பணிகள் இழுபறியாகச் செல்லும். மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பர். பெற்றோர் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணை நிற்பர். நிலுவையில் இருந்த வழக்குகள் சுமூகமான முறையில் முடிவதற்கு வாய்ப்பு உண்டு. பணியாளர்கள் அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் பல்வேறு தடைகளைத் தாண்டி செயலாற்ற வேண்டி வரும். வியாபாரிகள் கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். எதிர்காலம் பற்றிய சிந்தனையால் நிம்மதியான உறக்கம் கெடலாம். அலைச்சல் அதிகமானாலும் வெற்றி பெறும் மாதமே.
பரிகாரம் : கந்தசஷ்டி கவசம் தினமும் படியுங்கள்.