விசாகம் 4ம் பாதம் : முக்கியமான கிரகங்களின் சாதகமான நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராசிநாதன் செவ்வாயின் வலுவும் துணை நிற்பதால் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிதாக பல பெரிய மனிதர்களின் நட்பு உருவாகும். பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்ள நேரம் சாதகமாக உள்ளது. எதிர்கால நன்மை கருதி புதிய சேமிப்பில் ஈடுபட ஏற்ற நேரமாக இருக்கும். நாவிற்கு ருசியான உணவு வகைகளை உண்பதில் தனி ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் மிகுந்த தைரியத்துடன் மட்டுமல்லாது மதியூகத்துடனும் செயல்பட்டு எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உபயோகமாய் இருப்பார்கள். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வண்டி, வாகனங்கள் மற்றும் பிரயாணங்களால் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமை கொள்ளத்தக்க வகையில் இருக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். எண்ணிய காரியங்கள் சற்று தாமதமானால் கூட வெற்றிகரமாய் நடந்தேறும். உடல் உஷ்ண உபாதையால் அவதிப்படும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்பவர்கள் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்கேற்ற தனலாபம் நிச்சயமாக இருந்து வரும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிப்பதால் சிறப்பான நற்பலன்களைத் தரும் மாதமாக அமைந்துள்ளது.
பரிகாரம் : ஸ்வர்ணாகர்ஷண பைரவர். சந்திராஷ்டமம் : பிப்ரவரி 21
அனுஷம் : ஒன்பது கோள்களின் ஆதரவு தொடர்ந்து உங்கள் ராசிக்கு கிடைத்து வருவதால் சிறப்பான பலன்களை அடைந்து வருகிறீர்கள். தசாபுக்தியும் துணை நிற்கும் பட்சத்தில் உங்கள் வாழ்வினில் சிறப்பான நற்பலன்களை உருவாக்கும் காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. இதுநாள் வரை நீங்கள் கண்டு வந்த அலைச்சல்களின் பலனாக உட்கார்ந்த இடத்திலிருந்து உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடைந்து வரும். சேமிப்புகள் உயரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருந்து வருகிறது. புதியதாக நிலம், வீடு, வண்டி போன்றவைகளை வாங்க ஏதுவான காலமாக இருக்கும். பிள்ளைகளின் நல்வாழ்விற்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள். மனதிற்கு பிடித்த சுபசெலவுகளை செய்வதில் இன்பம் காண்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் சந்திப்பினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பாரம்பரியத்தை எண்ணி பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புண்டு. குடியிருக்கும் வீட்டினில் மாற்றம் செய்ய முற்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமைகொள்ளத்தக்க வகையில் அமையும். விருந்து, கேளிக்கை. கொண்டாட்டங்களை மனம் விரும்பும். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சேமிப்புகளில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். செலவுகள் ஒரு புறம் தொடர்ந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் வகையிலான பொருள்வரவு தொடர்ந்து இருக்கும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தொழில் ரீதியாக எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாக செய்து முடித்து கவுரவத்தோடு நல்ல பெயரையும் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு தொலைதூர வியாபாரம் நல்ல லாபத்தினைப் பெற்றுத் தரும். மனமகிழ்ச்சியைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ பிக்ஷாடனர் சந்திராஷ்டமம் : பிப்ரவரி 22
கேட்டை : தொடர்ந்து சிறப்பான உழைப்பினை வெளிப்படுத்தி வருவீர்கள். அயராத உழைப்பும், தளராத முயற்சியும் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். மனதில் இருந்து வரும் உத்வேகம் செய்யும் செயலில் வெளிப்படும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதினை அதிகமாக ஆக்கிரமிக்கும். புதிய செயல்திட்டங்களை வகுப்பதில் குழப்பம் உண்டாகும். சிறிது காலத்திற்கு புதிய முதலீடுகள், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் அமைதி காப்பது நன்மை தரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நிதானம் வெளிப்படும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் தேட முயற்சித்து வருவீர்கள். முன்பின் தெரியாத புதிய நபர்களின் பேச்சினை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடக்கூடாது. ‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது’ என்பதை நினைவில் கொள்ளவும். உடன்பிறந்தோரால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வண்டி, வாகனங்களால் செலவுகளைச் சந்திக்க நேரலாம். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அவர்களின் துணை உங்களுக்கு தேவைப்படலாம். உறவினர்களுடனான சந்திப்பின் மூலம் மனமகிழ்ச்சி காண்பீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் மேன்மையடையும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினைக் காண்பீர்கள். குடும்பத்தினரோடு உல்லாசச் சுற்றுலா, கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்குபெறும் வாய்ப்பு உண்டு. தம்பதியருக்குள் கருத்தொற்றுமை அதிகரிக்கும். பெண் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கடன் பிரச்னைகள் குறையும் நேரம் இது. குடியிருக்கும் வீட்டினை மாற்றும் எண்ணம் உருவாகலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில்முறையில் அயராது உழைத்து அதற்கேற்ற தனலாபத்தினைக் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை அடைவார்கள். அயராத உழைப்பின் மூலம் நன்மை காணும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ ஹயக்ரீவர் சந்திராஷ்டமம் : பிப்ரவரி 23
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »