பதிவு செய்த நாள்
13
பிப்
2021
08:02
சித்திரை 3, 4ம் பாதம் : இந்த மாதத்தில் எதிலும் அவசரப்படாமல் அமைதி காப்பது நல்லது. பிப்ரவரி 19ம் தேதி முதல் ஒரு சில தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும். முன்பின் தெரியாத நபர்களிடம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. லாபாதிபதி சூரியன் சாதகமான நிலையில் இருப்பதால் பல்வேறு வழிகளிலும் பொருள்வரவு இருந்து வரும். வரவிற்கேற்ற செலவும் வரிசையில் காத்திருக்கும். வார்த்தைகளில் வெளிப்படும் கடுமையைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தோருடன் இருந்து வந்த சொத்து சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்க நேரிடும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான நேரமாக இருக்கும். வண்டி, வாகனங்களை புதியதாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது. உறவினர்களின் வருகை குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டாக்கும். தொலைதூரப் பிரயாணங்களின்போது உடன் பயணிப்போருடன் கவனத்துடன் பழகுவது நல்லது. செல்போன் போன்ற தகவல் தொழில்தொடர்பு சாதனங்களால் இழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. பிள்ளைகளின் பெயரில் சொத்து சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். கவுரவத்திற்காக செய்யும் செலவினங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் அநாவசியமான வாக்குவாதத்தின் காரணமாக வீண் மனஸ்தாபம் கொள்வீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண இயலாது. தொலைதூர ஆன்மிகப் பிரயாணங்களுக்காக திட்டமிடுவீர்கள். ஆன்மிகப் பயணங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும் வகையில் அமையும். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க கால நேரம் கூடி வரும். தொழில்நிலை சிறப்பாக இருந்து வரும். வியாபாரிகள் நல்ல தனலாபத்தினை அடைவார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர்வினைக் காண்பர். நற்பலனைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : அன்னை பவானி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 19
ஸ்வாதி : இந்த மாதத்தில் உங்களின் நெடுநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. இழுபறியில் இருந்து வரும் குடும்பப் பிரச்னைகள் நெடிய போராட்டத்திற்குப் பின் முடிவிற்கு வரும். மாதத்தின் துவக்கத்தில் சுகமான சூழ்நிலையை சந்தித்து வரும் உங்களுக்கு இரண்டாம் வாரத்தில் இருந்து ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கும். பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் எதிர்ப்புகளை மீறி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நிலவும் சலசலப்பினைப் போக்கி கலகலப்பான சூழலுக்கு மாற்ற முயற்சிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் பழைய பாக்கிகள் வசூலாகும் நேரம் இது. அதிகாரமான பேச்சுக்கள் ஒரு சில நேரத்தில் அவப்பெயரை உண்டாக்கினாலும் அதையே உங்களது பலமாகவும் எண்ணுவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். உறவினர்களுடன் கலந்துரையாடுவதில் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். சுயகவுரவத்திற்காக ‘உதவுகிறேன் பேர்வழி’ என்று அகலக்கால் வைக்கலாகாது. உதவி செய்யப்போய் ஏமாற்றத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். மாதத்தின் முற்பாதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்குத் தக்கவாறு அமையும். அவர்களால் உங்கள் கவுரவம் உயரும் நேரம் இது. சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமான பிரச்னையில் நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் கூடுதல் உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஆயினும் அதற்குரிய தனலாபத்தினை உடனடியாகக் காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபகரமாகச் செல்லும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராது செயல்பட்டு வருவதால் வெற்றி கிடைக்கும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ மாரியம்மன்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 20
விசாகம் 1, 2, 3ம் பாதம் : இந்த மாதத்தில் எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டு வருவது நல்லது. தனாதிபதி செவ்வாய் எட்டில் ராகுவின் இணைவினைப் பெறுவது சிரமமான நிலையைத் தரக்கூடும். ஒருசிலர் உங்களது மன நிலையைப் புரிந்து கொண்டு கலகத்தின் மூலம் உங்களைக் குழப்ப முயலுவார்கள். முக்கியமாக அடுத்தவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது உங்களது சுயசிந்தனைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து செயல்படவேண்டும். பொருளாதார நிலை திருப்தியாக இருந்து வரும். சேமிப்பு போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மனமகிழ்ச்சிக்காக இன்பச்சுற்றுலா செல்ல நேரிடும். குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றுவதில் ஈடுபாடு கொள்வீர்கள். உடன்பிறந்தோரால் உபத்திரவங்கள் தோன்றும். வண்டி, வாகனங்களால் செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் கடும் உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. ஐந்தாம் இடம் வலுப்பெறுவதால் மனதில் தோன்றுவதை செய்தே ஆகவேண்டும் என்ற பிடிவாத குணம் உருவாகும். நன்மை, தீமையைப் பகுத்தறிந்து செயலில் இறங்குவது நல்லது. உடல்நிலை சீராக இருந்து வரும். நிலுவையில் இருந்த வந்த கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். பிள்ளைகளால் உங்கள் கவுரவம் உயரும் வகையிலான சம்பவங்கள் நிகழும். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுக்கள் எழக்கூடும். தொழில் ரீதியாக கூடுதல் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும் மாதம் இது.
பரிகாரம் : அன்னை அங்காள பரமேஸ்வரி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 20, 21