சதுரகிரியில் கனமழை; பக்தர்கள் பத்திரமாக திரும்பினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2021 10:07
வத்திராயிருப்பு: சதுரகிரியில் பெய்த கனமழையால் கோவிலில் தங்கிய பக்தர்கள் நேற்று காலை பத்திரமாக திரும்பினர். கோவிலில் ஆனி மாத அமாவாசை வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால் பிரதோஷ நாளன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் காலையில் மழை பெய்யாததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மாலை 5 மணிக்குமேல் மழை சூழல் உருவாகி, இரவு 6:30 மணி முதல் 8:30 மணி வரை கனமழை பெய்ததால் மலைப்பகுதி ஓடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலில் இருந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.
கன மழையின் தாக்கம் குறித்து அறநிலையத்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனைக்கு பிறகு அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் ரோடுகளில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததை வனத்துறையினர் உறுதிப்படுத்திய பிறகு மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். சங்கிலிப் பாறை, மாங்கனி ஓடைகளில் கயிறு கட்டி பக்தர்களை வனத்துறையினர் அழைத்து வந்தனர். நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி மலையை நோக்கி வணங்கி சென்றனர். தொலைதூர ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் சதுரகிரி அருகிலுள்ள மாவூற்று உதயநிகிரிநாதர் கோயில் தெப்பத்தில் குளித்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் நேற்று பகல் 12 மணிக்கு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் அமாவாசை வழிபாட்டை கோவில் அர்ச்சகர்கள் பக்தர்கள் இன்றி செய்தனர். தொடர்ந்து சதுரகிரி வனப்பகுதியில் மழைசூழல் காணப்படுவதால் இன்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார், வனத்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.