பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
பூரட்டாதி 4 ம் பாதம்: தன, குடும்ப, புத்திர, ஞான, அந்தஸ்துக்கு காரகனான குரு பகவானின் அம்சத்தை கொண்டுள்ள உங்களுக்கு, பங்குனி மாதத்தில் சூரியன், ராகு, செவ்வாய், சனி, கேது என பிரதான கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரிக்கின்றன. இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்கள் சங்கடங்கள் எல்லாம் விலகும். உடலில் இருந்த பாதிப்புகள் நீங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். மற்றவரால் ஏற்பட்ட அவமானங்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு சங்கடங்கள் நீங்கும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச்செல்வதால் நன்மை அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையளிக்கும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். அவர்களால் சில சங்கடங்கள் ஏற்படுவதற்கும் இக்காலத்தில் வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 27,28
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21,30, ஏப்.3,12
பரிகாரம்: நடராஜரை மனதில் நினைத்து வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி: தன, புத்திர, ஞானக் காரகனான குரு, ஆயுள் காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, அறிவாற்றலும் மற்றவர்களை வழிநடத்திச் செல்கின்ற திறமையும் இருக்கும். உங்கள் கவுரவத்திற்கு எந்த நிலையிலும் எப்போதும் குறைவு வந்து விடாது. பங்குனி மாதத்தில் உங்கள் ஜென்ம ராசிக்குள் ராகு, புதன், சூரியன் சஞ்சரித்து வருவதால் ஒரு பக்கம் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் குழப்பங்கள் உண்டாகும். எதை முன்னால் செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் குழம்புவீர்கள். ராகுவும், புதனும் உங்கள் ஆசைகளை அதிகரிப்பார்கள். அதனால் வீண் சங்கடங்களை சந்திக்க நேரும். நட்புகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விரய ஸ்தானத்தில் நட்சத்திர நாதனும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் செலவுகள் பல வகையில் தோன்றும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சுக்கிரனின் சஞ்சார நிலையால் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். ராகு, புதன் இணைவு, ஏழாம் இடத்தில் கேது என்பதால் எதிர்பாலினரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதல்படி செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 28,29
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,21,26,30, ஏப். 3,8,12
பரிகாரம் அஷ்டலட்சுமியை வணங்கி வர வாழ்க்கை வளமாகும்.
ரேவதி: அறிவு, புத்தி காரகனான புதன், ஞானக் காரகனான குரு பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எப்போதும் இருக்கும். மற்றவர்களை வழிநடத்திச் செல்வதில் முதன்மையானவராக இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு எது தேவையோ அதை நோக்கி முன்னேறுவீர்கள். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் உங்கள் ராசிக்குள் சஞ்சரிப்பதும், ராசிநாதன் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு மிகப்பெரிய யோகநிலை என்றே சொல்ல வேண்டும். அறிவுப்பூர்வமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள், நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். எல்லா நிலைகளிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களால் உண்டாகும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும். விவசாயிகளுக்கு திடீர் செலவு ஏற்படும். விவசாயப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 29,30
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,21,23, ஏப். 3,5,12
பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று வர சங்கடம் தீரும்.