பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
விசாகம் 4 ம் பாதம்: தைரியமும் வீரியத்துடன் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஆடி மாதம் யோக மாதமாகும். 12 ஆண்டிற்குப் பிறகு உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடம் காணாமல் போகும். உங்கள் ராசி நாதனும் குருவுடன் இணைந்து குரு மங்கள யோகம் உண்டாகி இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த வளர்ச்சியை இப்போது அடைவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவருக்கு மறுமணம் கூடிவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேங்கி இருந்த தொழிலில் மாற்றம் ஏற்படும். உற்பத்தியும் லாபமும் அதிகரிக்கும். லாபம் பலவழியிலும் அதிகரிக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்போரின் விருப்பம் பூர்த்தியாகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலத்திற்குரிய பாதைத்தெரியும். சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் தன் 10 ம் பார்வையால் ராசியையும் பார்த்து உங்கள் உடலில் நலிவினை ஏற்படுத்தி வந்த சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஆக. 1
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,21,27,30. ஆக. 3,9,12.
பரிகாரம்: ஆலங்குடி குரு பகவானை வழிபட முயற்சி வெற்றியாகும்.
அனுஷம்: எதிலும் நீதி நியாயம் பார்த்து விவேகத்துடன் வெற்றி கண்டு வரும் உங்களுக்கு, ஆடி மாதம் நினைப்பது நிறைவேறும் மாதமாக இருக்கும். சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடப்பலனை வழங்கி வந்த நட்சத்திர நாதன் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரையில் இருந்த சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். கனவு நனவாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்களுக்கு இருந்த தடை விலகும். குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் காண்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதுடன் குருவின் பார்வையும் அங்கே உண்டாவதால் வருமானம் உயரும். ஆன்மிக வாதிகள் செல்வாக்கு அடைவர். வெளிநாட்டு தொடர்பால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் நிலை உயரும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். விவாகரத்து பெற்றவர்களுக்கும் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய முயற்சி வெற்றியாகும். நிறைவேற்றாமல் இருந்த வேண்டுதல்களை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர். வித்யாகாரகன் புதன் வக்கிரம் அடைவதால் மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 1,2.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,18,26,27. ஆக.8,9.
பரிகாரம்: அனுமனை வழிபட சங்கடம் யாவும் நீங்கும்.
கேட்டை: மன உறுதியும், வலிமையும் கொண்ட உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் மாதமாக இருக்கும். ராசிநாதன் செவ்வாயும், குருவும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து சப்தம பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் காலம் இது. உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடம் எல்லாம் விலகுவதுடன் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் தோன்றும். புதிய பாதை தெரியும். தம்பதியரிடையே இருந்த சங்கடம் விலகும். ஒரு சிலருக்கு திருமணம் நடந்தேறும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். நோயில் இருந்து முழுமையாக மீண்டு வருவீர். மாதத்தின் முற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். முயற்சி ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். மற்றவர்களால் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். புத பகவானின் சஞ்சார நிலையும், 5 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதும் மேற்படிப்பில் சில சங்கடம் ஏற்படுத்தும் என்பதால் இந்த நேரத்தில் மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 2,3.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,23,27. ஆக. 5,9,14.
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.