பதிவு செய்த நாள்
10
மார்
2025
11:03
தஞ்சாவூர்; மகளிர் தினத்தை போற்றும் வகையில், சோழ பேரரசி செம்பியன் மாதேவியின் பெருமையை அறியும் வண்ணம், பெண்கள் பாரம்பரிய சுற்றுலாவாக நேற்று சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில், உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு, சோழர்களின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பினை இடத்தினை உருவாக்கிய“சோழ பேரரசி செம்பியன் மாதேவியாரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோவில்களுக்கு நேற்று பாரம்பரிய சுற்றுலாவாக 25 பெண்கள் கலந்துக்கொண்டனர். இது குறித்து கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க தலைவரும்,வரலாற்று ஆய்வாளருமான கோபிநாத் கூறியதாவது; சோழ சாம்ராஜ்யத்தில் ஆறு சோழப் பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் செம்பியன்மா தேவியார். சோழப் பேரரசர் கண்டராத்தசோழனை மணந்து, அவரைப் போல தானும் சிறந்த சிவத்தொண்டராக விளங்கினார். செம்பியன் மாதேவியார் சிரத்தையுடன், கும்பாபிஷேகம் செய்த சில கோவில்களுக்கு அழைத்து சென்று “செம்பியன் மாதேவிகலைப்பணி”என அறிஞர்களால் அழைக்கப்படும் அவரது தனித்துவமான கோவில் கட்டுமானம், அவரால் அறிமுக செய்யப்பட்ட கோஷ்ட சிற்பங்கள் அங்கு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் குறித்து விளக்கினோம். இதில், செம்பியன் மாதேவியால் திருவீழிமிழலை, கோனேரிராஜபுரம், தென்குரங்காடுதுறை ஊர்களில் உள்ள கோவில்கள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அங்கு செம்பியன்மா தேவி சிலைகள், கல்வெட்டுகள் குறித்து விளக்கப்பட்டது. அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க தேப்பெருமாநல்லுார், துக்காச்சி, மேலமருத்துவக்குடி, திருநீலக்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்றோம். செம்பியன் மாதேவியால், கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோவில்களில், அவரது கணவர் உருவ சிலை இருக்கும். சோழர்கள் காலக் கோவில்கள் நிலைத்திருக்க செம்பியன்மாதேவியாரின் கற்றளி மாற்றமும் ஒரு காரணமாகும். இவர் கி.பி.,1001 வரை இடைவிடாது கலைப்பணி செய்துள்ள வரலாற்று நாயகி செம்பியன் மாதேவியை அரசு போற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.