கோத்தகிரி; கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில், கேரள ரத ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை, 11:00 மணிக்கு டானிங்டன் பகுதியில் இருந்து, பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், திருக்காவடி ஊர்வலம் நடந்தது. அதில், சிவன், பார்வதி, விநாயகர், ராமபிரான், ஆஞ்சநேயர் மற்றும் அம்மன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமிட்டு கலைஞர்கள் பங்கேற்றனர். பகல், 1:00 மணிக்கு, கேரளா ரத ஊர்வலம் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு, அபிஷேக அலங்கார மலர் வழிபாடு நடந்தது. பகல், 1:30 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் கேரளா ரத ஊர்வலத்தில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில், கோத்தகிரி வட்டார மலையாள சமூக மக்கள் உட்பட, ஆயிரக்கணக்கான உள்ளூர் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.