பதிவு செய்த நாள்
25
மார்
2026
12:03
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இடம் தர்மஸ்தலா. இங்கு தான் உலகப்புகழ் பெற்ற மஞ்சுநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை அறியாதோர் என, யாரும் கர்நாடகாவில் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பிரபலமான கோவில். இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதியில், ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் சில கோவில்கள் மட்டுமே வெளியுலகிற்கு தெரிகின்றன. மற்ற கோவில்கள் எதுவும் பலருக்கும் தெரிவதில்லை.
அப்படி பலருக்கும் தெரியாத, தர்மஸ்தலாவில் உள்ள சிவன் கோவிலை பற்றி இக்கட்டுரையில் காண்போம். தர்மஸ்தலாவிற்கு அருகே பெல்தங்கடி தாலுகாவில் சூர்யா சதாசிவ ருத்ரா கோவில் உள்ளது. இந்த கோவில் மலைகளுக்கு மத்தியில், மிகவும் பசுமையான சூழலில் அமைந்து உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.
புராண கதைகள்: கடந்த, 13ம் நுாற்றாண்டில் பங்கா மன்னர்களால் கட்டப்பட்டது. லிங்க வடிவத்தில் சிவன் காட்சி அளிக்கிறார். மங்களூரு கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கோவில் வளாகத்தில் அழகிய குளம் இருக்கிறது. கோவிலின் பின்புறத்தில் உள்ள ஓர் இடத்தில், ஒருவித ஆற்றல் இருப்பதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். இக்கோவில் புராண கதைகளுடன் தொடர்புடையது.
கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் உள்ளன. அமைதியான சுற்றுப்புறத்தில் கோவில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் இருக்கிறது. கோவிலுக்கு செல்லும் வழியில் நுாற்றுக்கணக்கான களிமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்களை காணலாம். அதேபோல, கார், வீடு, தொட்டில் போன்ற களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளையும் காணலாம்.
களிமண் சிலைகள்: இவை வெறும் பொம்மை சிலைகள் மட்டுமல்ல. மாறாக, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் செய்த காணிக்கையாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனமுருகி சிவ பெருமானை வேண்டினால் ஆறு மாதங்களுக்குள் வேண்டுதல் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியவர்கள், களிமண் சிலைகளை காணிக்கையாக கொடுக்கின்றனர். களிமண் சிலைகள் கோவில் வளாகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
திங்கட்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்படும். கோவில் காலை, 7:30 முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலையில், 4:00 முதல் இரவு 6:30 மணி வரையும் திறந்திருக்கும். தினமும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
உஜ்ரேவில் இருந்து கோவில் வெறும் 4 கி.மீ., தூரத்திலும், தர்மஸ்தலாவில் இருந்து கோவில் 16 கி.மீ., துாரத்திலும் இருக்கிறது.