பதிவு செய்த நாள்
25
மார்
2026
12:03
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் குந்தாபூர் தாலுகா கமலாசிலே கிராமத்தில், பிராமி துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. அழகான மலைகள், பசுமையான காடுகளால் சூழப்பட்டு, குப்ஜா ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில், அமைதிக்கு பெயர் எடுத்த இடமாகவும் உள்ளது.
இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால், கருவறையில் வீற்றிருக்கும் பிராமி துர்கா பரமேஸ்வரி அம்மன், லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காளி, சரஸ்வதி, லட்சுமி தேவியர்கள் சந்திக்கும் இடமாகவும் இக்கோவில் பார்க்கப்படுகிறது. திரேதாயுகத்திற்கு முன்பே கோவில் கட்டப்பட்டதாகவும், புராண கதைகளின்படி பூவுலகில் உள்ளவர்களை துன்புறுத்தி வந்த கரரதாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த பார்வதி தேவி, சஹ்யாத்ரி காட்டில் தவம் செய்த ராய்க்வா முனிவர் முன் லிங்க வடிவில் தோன்றி ஆசி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையின் போது, குப்ஜா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தாலும், கருவறையை தண்ணீர் நெருங்குவது இல்லை. கோவிலை தண்ணீர் சூழ்ந்ததாலும், பக்தர்கள் வருகை ஒரு போதும் குறையாமல் இருப்பது, அம்மன் மீதுள்ள அசுர பக்தியை வெளிப்படுத்துகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக, ஏராளமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. நான்கு விருந்தினர் இல்லங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 74 அறைகள் உள்ளன. இதில், 24 ‘ஏசி’ அறைகள்; 50 நான் ஏசி அறைகள். ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் தங்கலாம். 12 வயதுக்கு உட்பட்டோருக்கு அறையில் தங்க கட்டணம் இல்லை. கோவிலுக்குள் பக்தர்கள் பாரம்பரிய உடை மட்டுமே அணிய வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான், சாமி தரிசனம் செய்ய வர வேண்டும்.
தொடர்புக்கு: 95915 60809, 63644 80126
* பெங்களூரில் இருந்து கமலாசிலே கிராமம் 416 கி.மீ., துாரம்.
* குந்தாபூரில் இருந்து 25 கி.மீ., துாரம்.
* மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, குந்தாபூருக்கு அரசு பஸ் சேவை உள்ளது. குந்தாபூர் சென்று அங்கிருந்து ஆட்டோ, வாடகை காரில் கோவிலுக்கு செல்லலாம்.
* ரயிலில் சென்றால் குந்தாபூரில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும்.