திருமலை வேங்கடேசன் பெருமை உலகறிந்தது. அந்த திருமலையில் நாம் தரிசிக்க வேண்டிய சிலாதோரணம், ஆஞ்சனேயர் கோயில் போன்ற முக்கியமான இடங்களில் ஹாத்திராம் பாபா மடமும் ஒன்று. இது சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மடம். இங்குள்ள கோயிலில் ராமன், சீதை லட்சுமணன், அனுமன் ஆகியோரின் எழில் மிகு சிலாரூபங்கள் உள்ளன. மிகத்தூய்மையாகப் பராமரிக்கப்படும் இக்கோயிலின் சாளக்கிராமங்களிலான தசாவதார மூர்த்தங்கள் அற்புதமாகக் காட்சிதருகின்றன. விஷ்ணுவின் சொரூபமான இந்தக் கற்கள் இந்திய - நேபாள எல்லையில், கண்டகி நதியில் மட்டுமே கிடைக்கின்றன. என்பது தனிச்சிறப்பாகும். இந்த சாளக்கிராமங்களை தினமும் துளசி இலைகளால் பூஜித்துவந்தால் மோட்சம் கிட்டுமென்பது ஐதீகம். இங்கே துளசிபூஜை மிகச்சிறப்பாக செய்யப்படுகின்றது. இவையன்றி 1,108 சாளக்கிராமங்களும் உள்ளன. மேலும் தசாவதார சிற்பங்களும் தத்ரூபமாக அமைந்துள்ளன. வடநாட்டிலிருந்து வரும் சாதுக்கள் இந்த மடத்தில் தங்கி இறைவனை வழிபடுகின்றனர்.
தென்னிந்தியாவிலிருந்து பக்தர்கள் வடநாடு செல்வதுபோல, அங்கிருந்தும் பக்தர்கள் இங்கு வருவார்கள். அப்படி வடநாட்டிலிருந்து வந்த ஒரு மகான் திருமலையில் இந்த மடத்தில் தங்கி தியானம் செய்துவந்தார். அப்போது அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தருளினார் அந்த மகானின் பக்தி மேலீட்டில் மகிழ்ந்த வேங்கடேசன் இரவில் இந்த மடத்துக்கு வந்து அவருடன் சொக்கட்டான் விளையாடுவார். ஒருநாள் நேரம் போவதே தெரியாமல் விளையாடியதில் பொழுது புலரும் தருணமே வந்துவிட்டது. இதையுணர்ந்த பெருமாள் கோயிலில் இருக்கவேண்டிய நேரமல்லவா இதுவென்று, வேகமாக எழுந்து ஓடினார். அப்போது அவரது கழுத்திலிருந்த ஆரம் ஒன்று கீழே விழுந்துவிட்டது. அந்த மகான் அதை எடுத்துக்கொண்டு பெருமாளிடம் சமர்ப்பிக்கச் சென்றார். காவலாளிகளிடம் விவரத்தைக் கூற. அவர்கள் அவரை ஏளனம் செய்தனர்.
அவர்மீது திருட்டுக்குற்றம் சுமத்தினர் வழக்கு அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. ராயராலும் அந்த மகானின் கூற்றை நம்பமுடியவில்லை. தினமும் இரவில் பெருமாள் வந்து அவருடன் சொக்கட்டான் ஆடினார் என்பதை நம்புவது கடினமாக இருந்தது. எனவே மன்னர் ஒரு சோதனை வைத்தார். ஒரு அறையில் நிறைய கரும்புக்கட்டுகளைப் போட்டு, அந்த அறைக்குள் அவரைவிட்டு பூட்டச் செய்தார். பலமான காவலும் போடப்பட்டது. அன்று இரவுக்குள் அந்த கரும்புக் கட்டுகள் அனைத்தையும் தின்று தீர்க்கவேண்டுமென்பது நிபந்தனை. மகான் பெருமாளை சரணடைந்தார். அப்போது ஒரு வெள்ளை யானை அறைக்குள் தோன்றியது. அது அங்கிருந்த கரும்புக்கட்டுகள் அனைத்தையும் தின்றும் முடித்துவிட்டு ஒருமுறை பிளறியது காவலர்கள் அதிர்ந்தனர். மன்னருக்கு தகவல் சொல்லப்பட்டது. கிருஷ்ண தேவராயர் விரைந்து அங்கு வந்தார்.
பூட்டைத் திறக்க சொல்லிப் பார்த்தபோது அங்கு கரும்புக்கட்டுகளும் இல்லை; யானையும் இல்லை! அனைவரும் கண்டு அதிசயித்து அந்த மகானைப் போற்றினர். கிருஷ்ண தேவராயர் அந்த மகானிடம், அந்த வேங்கடவனே உம்மைக் காக்க ஓடி வருகிறானென்றால் எத்தகைய தவசீலர் நீங்கள். இனி இந்த திருமலை கோயில் நிர்வாகப் பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் மடத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து பரிபாலிக்கட்டும் என்று திருமலைக் கோயிலின் பராமரிப்பு உரிமையை அந்த மகானுக்கே வழங்கினார். யானையை வடமொழியில் ஹாத்தி என்பார்கள் மேற்படி நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த மகானின் பெயர் ஹாத்திராம் பாபா என்று விளங்கலாயிற்று அன்றுமுதல் 1932 வரை ஹாத்திபாபா மடத்தின் நிர்வாகத்தில்தான் திருமலைக் கோயில் இருந்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் என்ற அமைப்பு அரசால் உருவாக்கப்பட்டு, அது நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது என்றாலும் இன்றும் வேங்கடவனுக்கும் முதல் நிவேதனம் (வெண்ணெய், கற்கண்டு, வெற்றிலை) இந்த மடத்திலிருந்துதான் செல்கிறது ஹாத்திராம் பாபாவின் சமாதி வேணுகோபால தீர்த்தம் அருகே உள்ளது. பெருமாளே வந்து இரவில் சொக்கட்டான் விளையாடிய பெருமைக்குரிய இந்த மடம் திருமலைக் கோயில் வளாகத்தில் தெற்குப் பகுதியில் உள்ளது. சில படிகள் ஏறிச்செல்லும்படி அமைந்த இந்த மடத்தை திருமலை சென்றால் தரிசித்து வாருங்கள்.