தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்போதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2016 04:04
தமிழ்ப் புத்தாண்டு என்று நாம் சொல்லும் வருடப் பிறப்பு, உலகத்துக்கே பிறந்த நாள் ஆகும். உலகம் என்றால் மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை அனைத்தும் தோன்றிய நாள் உலகத்துக்குப் பிறந்த நாள் ஆகிறது. அந்தப் பிறந்த நாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன.
அன்றைக்கு சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷ ராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்த இடத்தில் ஆரம்பித்து விண் வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம் என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள் உள்ளன. அவற்றை 12 ஆகப் பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாக கணக்கிடப் படுகிறது. அதாவது 30 பாகை கொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும். இந்தப் பயணம் ஆரம்பித்த நாளை வருஷப் பிறப்பு என்று வழி வழியாக நம் முன்னோர்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர்.
இதில் தமிழ் வருஷப் பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு என்று வித்தியாசங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். இரண்டும் ஒன்றுதான், தெலுங்கு வருடப்பிறப்பை ‘யுகாதி’ என்று சொல்வதிலிருந்து சதுர் யுகம் ஆரம்பித்த முதல் நாளையே அது குறிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
சதுர்யுகம் ஆரம்பித்த நேரத்தில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருந்தனர். சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது அமாவாசை ஆகும். அதற்கு மறுதினமான வளர்பிறை பிரதமையில் யுகங்கள் ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் சூரியனது நிலையை மட்டுமே நாம் கணக்கில் கொள்கிறோம், தெலுங்கர்கள் உட்பட பிற மாநிலத்தவர்கள் சந்திரன் இருந்த இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.