பதிவு செய்த நாள்
20
அக்
2017
05:10
தமிழர்களின் குறிஞ்சி நில தெய்வம் முருகன் குறித்த தகவல்கள் சில இங்கே..: முருகனுக்குரிய விரதங்கள்: சுக்ரவிரதம், வெள்ளி விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். முருகனுக்குரிய மந்திரங்கள்: பஞ்சகலா மந்திரம், பஞ்சப்பிரம்ம மந்திரம், ஷடங்க மந்திரம், சம்மிதா மந்திரம், மயில் மந்திரம், ஷடாட்சர மந்திரம். முருகனுக்கு உரிய திருவிழா நாட்கள்: மார்கழி - திருவாதிரை, தை - பூசம், மாசி -மகம், பங்குனி -உத்திரம், சித்திரை - சித்திரை, வைகாசி - விசாகம், ஆனி - மூலம், ஆவணி - திருவோணம், ஆடி - பூரம், புரட்டாசி - பூராடம், ஐப்பசி - அசுவதி, கார்த்திகை - கார்த்திகை.
முருகனின் திருநாமங்கள்: முருகனை - குரு என்பர். கு - அஞ்ஞான இருள், ரு- நீக்குபவர். அறியாமை இருளை அகற்றி ஆன்ம ஞானத்தைப் போதிக்கின்றவர் என்பதால் குரு, குருநாதன், குருசாமி, குருமூர்த்தி, குமரகுரு, பரமகுரு, குரு சிரோன்மணி, குருபரன் ஆகிய திருநாமங்களால் அழைக்கப்படுகின்றார். அக்னி தேவனையும் சூரனின் ஒரு கூறான கோழியையும் கொடியாக்கிக் கொண்டவன் செந்தமிழ் முருகன். காங்கேயன், கார்த்திகேயன், கங்கை மைந்தன், அறுமீன் காதலன் என்ற பெயர்கள் சரவனத்தில் உதித்த காரணத்தால் வந்தவை. மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றோர் பெயர் உள்ளது. பல்லவ மன்னர்கள் முருகனை பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன். பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என செப்பேடுகள் கூறுகின்றன.
முருகன் சங்க நூல்களில் சித்தன், சேய், செவ்வேள், வேள், நெடுவேள், சேவற்கொடியோன் முதலான பெயர்களால் அழைக்கப்படுகின்றார். அம்மைக்கும், ஐயனுக்கும் இடையே முருகன் அமர்ந்து விளங்குவது இரவுக்கும், பகலுக்கும் நடுவே மாலைப்பொழுது உள்ளதுபோல் அமையும். உமையம்மை கருநிறம்; சிவபெருமான் திருநீறு தரித்த வெண்ணிறம்; முருகன் அந்தி மாலையின் அடிவானத்துச் செந்நிறம். இந்தத் திருக்கோலமே சோமாஸ் கந்தர் என்று வணங்கப்படுகின்ற அருட்கோலம் ஆகும். முருகனின் ஆறுமுகங்களில் இருந்து வெளிப்படும் ஒளிகள்: ஞானப்பிரகாசம், ஞானானந்தப் பிரகாசம், சர்வ ஞானவியாகப் பிரகாசம், சுத்தஞான சாட்சிப் பிரகாசம், சர்வபரிசுத்த பிரம்மஞானாந்த அருட்பிரகாசம், சுஜாதி நித்தியப்பிரம ஞானானந்த சிவப்பிரகாசம். முருகனை வழிபட உகந்த மந்திரங்கள்: ஓம் சரவணபவ ஓம் குமாராயநம. முருகன் எழுந்தருளியுள்ள குன்றுகள்: திருமலை சிவகிரி, மயிலம், திருத்தணிகை, வள்ளிமலை, விராலிமலை, கஞ்சமலை, தேனிமலை, கொல்லிமலை, மருதமலை, அழகு மலை, சுருளி மலை.