பதிவு செய்த நாள்
13
பிப்
2021
08:02
உத்திரம் 2, 3 4ம் பாதம் : ஆறாம் இடம் வலுப்பெறுவதால் இதுநாள் வரை இருந்து வந்த நிலை மாறி சற்று சிரமத்திற்கு உள்ளாவீர்கள். மார்ச் 7ம் தேதி முதல் ராசிநாதன் புதன் ஆறாம் இடத்தில் சூரியன் மற்றும் சுக்ரனின் இணைவினைப் பெறுவது நீங்கள் எதிர்பாராத திடீர் மாற்றங்களையும், நிகழ்வுகளையும் உருவாக்கலாம். 12ம் இடத்திற்கு அதிபதியான சூரியன் 6ம் இடத்தில் இணைவதால் விளைவுகள் சற்று பலம் வாய்ந்ததாக அமையும். நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தினை மனதில் நிலை நிறுத்துவீர்களேயானால் நற்பலனை அதிக அளவில் அடைவீர்கள். தீய எண்ணங்கள் உருவானால் தீயவையும் நடந்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதால் மனதினில் நற்சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். பொருளாதார நிலை மிகநன்றாக இருந்து வரும். சேமிப்புகள் உயரும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோரால் ஒருசில தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகலாம். பிரயாணத்தின்போது முன்பின் தெரியாத நபர்களிடம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆறாம் இடம் வலுப்பெறுவதால் கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சிறுசிறு பிரச்னைகள் கூட பெரிதாகலாம் என்பதால் அலட்சியமாக இருக்காமல் உடனுக்குடன் உடல்நிலை மாற்றங்களை கவனித்துக்கொள்வது நல்லது. சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவதால் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை. மாதத்தின் முற்பகுதியில் நினைத்த காரியங்களை எளிதாக நடத்தி முடித்துவிடுவீர்கள். மனதில் இனம்புரியாத சஞ்சலம் குடியிருந்து வரும். எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். தொழில்நிலையில் சிறிது அலைச்சலை சந்திப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வோர் தொழில்முறையில் இடமாற்றம் செய்ய் வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ ஷண்முகநாதர்
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 16, 17
ஹஸ்தம் : மாசி மாதத்தினை சிறப்பான முறையில் துவக்கும் உங்களுக்கு போகப் போக சற்றே சிரம நிலை தோன்றக்கூடும். ராசிநாதனின் இடப்பெயர்ச்சி நிலையினால் சற்றே போராட்டமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். நினைத்த காரியங்கள் எளிதில் முடியாமல் இழுபறியைத் தோற்றுவிக்கும். ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக இறங்கி பணியாற்ற வேண்டியிருக்கும். சுகமாக அமர்ந்திருந்த காலம் மாறி சுறுசுறுப்புடன் காரியமாற்ற வேண்டிய நேரம் இது. உழைப்பிற்கான பலனை உடனடியாகக் காண்பீர்கள். கடுமையான உழைப்பு சிறப்பான தனலாபத்தினை உண்டாக்கித் தருகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் வெற்றி காணும். அதே நேரத்தில் அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்பது நல்லதல்ல. மாதத்தின் பிற்பாதியில் உண்டாகும் கிரக மாற்ற நிலை சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடச் செய்து புதிய பிரச்னைகளைத் தோற்றுவிக்கலாம். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி எரிச்சலூட்டும். உறவினர்களால் குடும்பத்தில் கலகம் தோன்றக்கூடும். பாகப்பிரிவினை விஷயங்களில் மூன்றாவது மனிதர்கள் தலையிடுவதை விட நீங்களே நேரடியாக முடிவெடுத்து செயல்படுங்கள். மாணவர்களின் தங்களின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு நண்பர்களோடு இணைந்து படிப்பது நல்லது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும். நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உடலில் தலைதூக்கும். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. அலுவலகத்தில் அடுத்தவர்களின் பொறுப்புகளை நீங்கள் சுமக்க நேரிடலாம். பண விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினை ஆக்கிரமிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நன்மை காண வேண்டிய மாதம் இது.
பரிகாரம் : ஏகாதசி விரதம்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 17
சித்திரை 1, 2ம் பாதம் : இந்த மாதத்தில் நட்சத்திர அதிபதி செவ்வாயின் நிலையால் மனதில் தோன்றுவனவற்றை உடனுக்குடன் செய்து முடித்துவிட வேண்டும் என்ற அவசர எண்ணம் உருவாகும். சிந்தனைகளில் வேகத்தினை உணர்வீர்கள். செய்யும் செயல்கள் மற்றவர்களின் அங்கீகாரத்தினைப் பெற வேண்டும் என்ற எண்ணமும், மற்றவர்கள் மத்தியில் தனது சுயகவுரவம் உயரவேண்டும் என்ற எண்ணமும் தலைதூக்கும். தனாதிபதியின் நிலை சாதகமாக இருந்து வருவதால் பொருள்வரவிற்குக் குறைவிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி தொடர்ந்து நிலவி வரும். உங்களது சிந்தனையில் தோன்றுவனவற்றிற்கு செயல்வடிவம் தர முயற்சிப்பீர்கள். தொலைதொடர்பு சாதனங்கள் மிகுந்த உபயோகத்தினைத் தரும். சகோதரர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வண்டி, வாகனங்கள் ஆதாயத்தினைத் தரும் வகையில் இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றத்தினைக் காண்பார்கள். ஐந்தில் சனி வாசம் செய்து ஞாபக மறதியினைத் தோற்றுவித்தாலும், குருவின் இணைவால் சனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து நன்மை உண்டாகும். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். நண்பர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய நேரிடும். பிள்ளைகளால் ஒரு சில செலவுகளுக்கு ஆளாக நேரிடும். தகப்பனார் வழி உறவினர்களின் துணையுடன் பூர்வீக சொத்துக்களில் ஆதாயம் காணும் வாய்ப்பு உருவாகும். வீண் கற்பனைகளின் காரணமாக அடுத்தவர்களிடம் குறை காணும் எண்ணம் உண்டாகும். பயத்தினைத் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற அவசரமான எண்ணத்தினால் ஒரு சில இழப்புகள் தோன்றலாம். நிதானம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ யோக நரசிம்ஹ ஸ்வாமி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 18