பதிவு செய்த நாள்
30
நவ
2023
03:11
சபரிமலை: சபரிமலை மற்றும் பாதைகளில் துப்புரவு பணிக்காக இந்த ஆண்டு ஆயிரம் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை சுகாதார சங்கத்தின் கீழ் இந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். சபரிமலை மற்றும் சபரிமலை பாதைகளில் துப்புரவுப் பணி தாறுமாறான போது 1995ஆம் ஆண்டு பத்தனம்திட்டை கலெக்டர் தலைமையில் சபரிமலை சுகாதார சங்கம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு ஐயப்பா சேவா சங்கம் வழியாக சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை தேர்வு செய்து இங்கு பணியில் அமர்த்துகின்றனர். இவர்களுக்கு சம்பளத்துடன் சீருடை, செருப்பு, பாய், எண்ணெய், , பெட்ஷீட், உணவு, போன்றவை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சன்னிதானத்தில் 300, பம்பையில் 210, நிலக்கல்லில் 450, பந்தளத்தில் 30, குளறடையில் 10 என ஆயிரம் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த தொழிலாளர்கள் பணியாற்றி சபரிமலை மற்றும் சபரிமலை பாதைகளை சுத்தமாக பராமரிக்கின்றனர். இது பற்றி கருத்து தெரிவித்த தொழிலாளர்கள் ஐயப்பனின் புனித மண்ணில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று கூறுகின்றனர்.அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக தேவசம்போர்டுக்கு கேரள அரசு மானியம் வழங்குகிறது.