பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
09:07
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. கந்தனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை தினமே கார்த்திகேயனுக்கு உரியதாகிவிட்டது. ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை ஆராதிப்பார்கள். பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.
ஆடி கிருத்திகை அன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமான் சிலை அல்லது வேல் இருந்தால், பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி போன்ற அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். நல்ல மணமுள்ள மலர்கள், சிகப்பு நிற மலர்கள் சூட்டி சந்தனம், குங்குமம் வைத்து விடலாம்.