பதிவு செய்த நாள்
28
மார்
2011
05:03
குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க அணிகலன்கள் இல்லை. பாலை மணி எனப்படும் சிறிய ஆபரணத்தையே அவர்கள் அணிந்திருந்தனர். மரவுரியைத் தான் அவர்கள் ஆடையாக அணிந்திருந்தனர். பட்டாடை என்ன... பருத்தி ஆடை கூட அவர்களுக்கு கிடையாது. ஒரு சில வீடுகளில் குழந்தைகள் பாடாய் படுத்துவார்களே...அம்மா...என் நண்பன் வீட்டிற்கு நேற்று சென்றிருந்த போது, அவர்கள் தந்த அதிரசத்தை நீயும் செய்து தாயேன் என்று...அத்தகைய சங்கதிகள் எல்லாம் இங்கு கிடையாது. அவர்கள் வீட்டில் வறுமை கோரத் தாண்டவமாடியது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு மனைவி என்ன சொல்லியிருப்பாள். பெருசா பிரெண்ட்டுன்னு சொல்றீரே உம்ம கிருஷ்ணனை! அவன் துவாராகாபுரிக்கே ராஜா என்கிறீரே! அப்படியானால், அவனிடம் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரப்புடாதோ! என்று தானே படுத்தியிருக்க வேண்டும். சுசீலை பதிவிரதா தன்மை மிக்கவள். கிருஷ்ணரைப் பார்த்து வரச் சொன்னோமே! ஒருவேளை, பொருளுதவிக்காக மறைமுகமாக அனுப்பி வைக்கிறாளோ என்று அவர் தன்னைப்பற்றி தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று சுசீலைக்கு நெஞ்சு அடித்துக் கொண்டது. ஆனால், தனது தர்மபத்தினியைப் பற்றி அறியாதவரா அந்த மாமேதை! அவருக்கு அவளை நன்றாகத் தெரியும், அவ்வளவு அன்யோன்யமான தாம்பத்யம்! வறுமையோ, வளமையோ...கணவன், மனைவிக்குள் மட்டும் புரிதல் தன்மை இருந்து விட்டால் போதும்! சொர்க்கத்தை வேறு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை, அது நமது வீட்டுக்குள்ளேயே நிரந்தரமாக கூடாரம் போட்டு விடும். மனைவி சொன்னது குறித்து குசேலர் சிந்திக்க ஆரம்பித்தார்.
கிருஷ்ணன் மகாராஜா. அவன் நம்மை நினைவில் வைத்திருப்பானா? பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் எல்லாம் காலவெள்ளத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் மறந்து விடுவார்களே! வேண்டாம்! ஒருவேளை, நீ யாரென்று கேட்டு அவன் ஏதாவது சொல்லி விட்டால்...இப்படி சிந்தித்தவர் அப்படியே தடம் மாறினார்.சேச்சே! இது என்ன சிந்தனை! என் கண்ணன் எப்பேர்ப்பட்டவன்! கருணாமூர்த்தியல்லவா அவன்! அவன் என்னை மறப்பதா? சாந்தீபனி முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த போது, ஒருவரை விட்டு ஒருவர் கணநேரம் கூட பிரிந்ததில்லையே! எவ்வளவு இனியமொழி பேசுவான் அவன்! செல்வச்செருக்கு அவனிடம் ஏது! தேவகி பெற்ற பாலகன், யசோதையின் தவப்புதல்வன்... அவன் எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும், இந்த ஏழையுடன் உறவு கொண்டானே! அது மட்டுமா! கண்ணன் இருக்குமிடத்தில் கவலைக்கு இடமேது! அவனது நாட்டிலுள்ள மக்களெல்லாம் அவனுக்கு நிகரான செல்வத்துடன் வாழ்கிறார்களாமே! அப்படிப்பட்ட திவ்யமான ஆட்சி நடத்தும் அவனா என்னைப் புறக்கணிப்பான்! சரி...அவன் என்னைப் பார்க்க விரும்பவில்லை என்றே வைத்துக் கொள்வோமே! அவன் தானம் செய்வதற்கென்றே காலையில் வெளியே வருவானாமே! அப்போது, அவன் முகத்தைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்குமே! நம் நோக்கம் அவனது தரிசனத்தைப் பெற வேண்டும்! அவனது திருவடியைக் கண்குளிரக் கண்டு சரணாகதி அடைய வேண்டும்! இந்த வாய்ப்புமா கிட்டாது! என்று எண்ண அலைகளை ஓடவிட்டார்.சுசீலை அவரது பதிலுக்காக காத்திருந்தாள்.கணவர் யோசனையில் இருக்கும்போது, மனைவி குறுக்கே பேசக்கூடாது. குசேலர் தொடரைப் படிக்கும் பெண்மணிகள், சுசீலையைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இது பெண்ணடிமைத்தனமல்ல! புத்திமதி! வாழ்க்கையின் யதார்த்தம்... விட்டுக் கொடுத்து போகும் தன்மை. வளையாமல் எந்த ஊரிலாவது நதி இருக்கிறதா! வளைந்து சென்றால் தான் அது தன் இலக்கை எட்ட முடியும்! அதுபோல் தான் வாழ்க்கையும்! குசேலர் மனைவியை அமரச் சொன்னார்.
பவளம் போன்ற உதடுகளைக் கொண்டவளே! கேள்! தக்க சமயத்தில், கிருஷ்ண தரிசனம் பெற வேண்டும் என்று நினைவூட்டியதற்காக உன்னைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். உன் குழந்தைகளும், நீயும் வறுமையில் உழன்றாலும் கூட, அவனிடம் போய் செல்வம் பெற்று வாருங்கள் என்று சொல்லாமல், தரிசித்து வாருங்கள் என்று சொன்னாயே! உன்னை எப்படி பாராட்டுவது! வறுமை கொடியது தான்! ஆனால், அது ஏன் ஒருவனை ஆட்டிப்படைக்கிறது தெரியுமா? முற்பிறவியில் வாழ்க்கை தர்மத்தைக் கடைபிடித்து வாழ்பவர்கள் இப்பிறவியில் சகல வளத்துடனும் வாழ்வார்கள். தர்மம் தவறியவர்கள் வறுமை என்னும் துன்பத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதற்காக வருந்திப் பயனில்லை. அப்படி வருந்துவது அறியாமை. அது மட்டுமல்ல! நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்பது மனிதர்களின் எதிர்பார்ப்பு. எம்பிரான் கண்ணனைத் தவிர, மற்றவர்களுக்கு அது கைகூடாது. முற்பிறப்பில் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப கரிய நிறமுடைய திருமால் உயிர்களுக்கு வறுமையையும், செல்வத்தையும் தருவான், என்றவரை ஆர்வமாய் நோக்கிய சுசீலை, வாழ்க்கையின் யதார்த்த நிலையை இவரை விட வேறு யாரால் இவ்வளவு அருமையாகச் சொல்ல முடியும்? என்று கருதியவளாய் கணவரை பெருமையுடன் நோக்கி, ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள். குழந்தைகளும் ஓடிவந்து வட்டமாக அமர்ந்து கொண்டனர்.சிறிது தீர்த்தத்தை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்த குசேலர் அதைப் பருகிவிட்டு தொடர்ந்தார்.மணம் வீசும் கூந்தலை உடையவளே! கடவுள் ஏன் பறவைகளையும், விலங்குகளையும் படைத்தான் தெரியுமா? அவை வருமானத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. புதையலைத் தேடி அலைவதில்லை. யாரிடமும் சென்று எதையும் பிச்சை கேட்பதுமில்லை. நாளை உணவுக்கு என்ன செய்வது என்று யோசிப்பதும் இல்லை. ஆனால், அவை தன் இனத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்றன. அவை உணவில்லாமல் உயிர்விட்டதும் இல்லை. கல்லில் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் சிறு கருமுட்டைக்கும் உணவளிக்கும் நம் பரந்தாமன், நம்மைக் காப்பாற்றுவான் என்று உறுதியாக நம்புகிறாயே! எனக்கு பெருமையாக இருக்கிறது, என்றவர் தொடர்ந்தார்.