திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிகோயில் ‘கீழ்பழநி’ என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பாண்டியர்கள் காலத்தில் வரகுண பாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது என்பது செவிவழி செய்தி.
ஆரம்பத்தில் குடிசையாகத்தான் இக்கோயில் இருந்தது. 1979ல் கிருபானந்த வாரியார் முதல் முறையாக வந்தார். அப்போது கோயிலை சீரமைக்க பணிகளை துவக்கி, 1981ல் கும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பின் 1991ல் மீண்டும் அவரே கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். முதலில் இருந்த முருகன் சிலை சேதமடைந்து இருந்ததால் அந்த சிலைக்கு மேலே மற்றொரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டு அடுக்காக சிலைகள் உள்ளது. மேலே உள்ள சிலைக்கு அபிஷேகம் செய்தால் அடியில் உள்ள சிலைக்கும் அபிஷேகம் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 26 கி. மீ., துõரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. பொதுவாக முருகன் கோயில்கள் குன்றின் மீது ஏறிச் சென்று வழிபடும் விதமாக இருக்கும். இங்கு, குன்றின் படிகளில் கீழே இறங்கி சென்று வணங்கும் விதமாக கோயில் அமைந்துள்ளது. திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளம். நாவல் மரம் ஸ்தல விருட்சம். வள்ளி தெய்வானை தீர்த்தம் உள்ளது. முருகன் எப்போதும் ராஜ அலங்காரத்தில் மட்டுமே காட்சியளிக்கிறார். கந்தசஷ்டி விழா விசேஷமாக இருக்கும். கோயில் அருகிலேயே அபிஷேக பொருள் வாங்க கடைகள் உண்டு, உணவு விடுதிகள் கிடையாது.