சேதுக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் மக்களால் அதிகம் அறியப்படாத பழமையான கோயில்களில் ஒன்று சேதுக்கரை சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இக்கோயில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக கோயில் கல்வெட்டில் குறிப்பிடபட்டுள்ளது. மூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்துõண்கள் பராமரிக்காவிட்டாலும் மழை, வெயில், இயற்கை சீற்றங்களுக்கு ஈடுகொடுத்து சேதமடையாமல் கம்பீரமாக தோற்றமளிப்பது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் வைணவத்திருத்தல பக்திநெறி தலைவர் நாராயணன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் இருந்து 6 கி.மீ., திருப்புல்லாணியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் சேதுக்கரை செல்லும் வழியில் நீண்ட பிரகாரத்துடன் கூடியதாக இக்கோயில் அமைந்துள்ளது. ‘சேது ஹிமாச்சலா’ என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளதைப் போன்று இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை திகழ்கிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில் தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார்.
கோயிலின் சிறப்பு: தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் (அபய ஹஸ்தத்து) காட்சியளிக்கிறார். சன்னதிக்கு வெளியே 80 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெண்பளிங்கு சிலையில் மகாவிஷ்ணுவின் வலதுபுற கரத்திற்கு பதிலாக சங்கு இடமாறி உள்ளது. சிலையை சுற்றிலும் பெருமாளின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் எனும் மந்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தத்தில், கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலைவலியினை குணப்படுத்தி வருகிறது. இதன் மகத்துவம் அறிந்தவர்கள் துளசி தீர்த்தம் பெற்று செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஒரு கால பூஜை மட்டும் செய்து கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இக்கோயிலை பற்றி மேலும் தகவல் பெற விரும்புவோர் 94865 62277 ல் தொடர்பு கொள்ளலாம்.