போடி: தென்காசியம்பதி என போற்றப்படும் போடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமது எண்ணெய்க்கார முத்தம்மாள் காளியம்மன் கோயில். அனைத்து சமுதாய மக்களால் உருவாக்கப்பட்ட 75 ஆண்டு கால பழமை வாய்ந்த இக்கோயில், வடக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பாகும். இதனால் இக்கோயிலை வடக்குவாச்செல்வி எண்ணெய் கார முத்தம்மன் ஸ்ரீமது காளியம்மன் கோயில் என அழைக்கின்றனர். கோயிலின் மூலஸ்தனத்தில் காளியம்மனும், வலது புறம் விநாயகரும், இடதுபுறம் நாகம்மாள் சுவாமியும் உள்ளனர்.
வெளிபிரகாரத்தில் இடது புறம் விநாயகரும், வலது புறம் முருகனும் உள்ளார். வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் அம்மனை மனமுவந்து வணங்கினால் குழந்தை பாக்கியமும், கல்வி, வேலைவாய்ப்பு, மன அமைதி உள்ளிட்ட சகல சவுபாக்கியங்களும், தொழில் அபிவிருத்தியும் கிடைத்து வருகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயில் தினமும் காலை 6.30 முதல் மதியம் 9.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெறும்.
ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி பூஜைகளும், பவுர்ணமி விளக்கு பூஜையும் நடக்கிறது. ஆண்டுதோறும் பங்குனி முதல் வாரத்தில் 3 நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலுக்கு பொதுமக்கள் எண்ணெயை காணிக்கையாக வழங்குகின்றனர். சங்கடகர சதுர்த்தியன்று விநாயகருக்கும், தோஷங்கள் நிவர்த்தி செய்யும் வகையில் நாகம்மாளுக்கும் சிறப்பு பூஜைகளை குருக்கள் வி.மணிமாறன் செய்து வருகிறார். இக்கோயில் பற்றிய மேலும் விபரங்களைஅறிந்து கொள்ள ... 83440 15572 ல் தொடர்பு கொள்ளுங்கள்.