திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2017 05:02
சமஸ்கிருதத்தில் இதை ‘சப்தபதி’ என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையை சாஸ்திரங்கள் கூறுகிறது.
முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும் இரண்டாம் அடியில்: ஆரோக்கியமாக வாழ வேண்டும் மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும் நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும் ஐந்தாவது அடியில்: லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும் ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும் ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும். இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூட்ஷமமான மனோவியல் விஷயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம்.
உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும் என்பது ஒரு சூட்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து நம் இந்து தர்மத்தில் அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.