சமய வழிபாட்டில் சேவலுக்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக, முருக வழிபாட்டில் சேவல் சிறப்பிடம் பெற்றுள்ளது. சேவல் அக்னியில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனை அக்னி மதலை (நெருப்புக் குழந்தை) என இலக்கியங்கள் கூறுகின்றன. வள்ளிக் குறத்தியை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தபோது, மலையகத்தின் பறவையான கோழியும் சீதனமாகத் தரப்பட்டதாம். முருகப் பெருமான் சேவற்கொடியோன் என்றும், கோழிக் கொடியேன் என்றும் அழைக்கப்படுகின்றான். தாராசுரத்திலுள்ள முருகப் பெருமானின் திருக்கரத்தில் சேவல் இருப்பதைக் காண்கிறோம். புலவர்கள் சேவல் ஏந்தும் செல்வக்குமரனாக முருகனைப் போற்றுகின்றனர். முருகன், தனது தேரில் கோழியைக் கொடியாகக் கொண்டிருந்தார் என்கிறது கந்தபுராணம்.
முருகனுக்கு அக்னிதேவன் கோழியைத் தந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அதுபோல சூரியன், குறவர்கள், தேவர்கள் ஆகியோரும் கோழிகளைச் சமர்ப்பித்த தகவல் உண்டு. சூரியன் முருகனுக்கு அளித்த சேவலுக்குத் தாம்ரசூடன் என்று பெயர். இலக்கியங்கள் காலைச் சூரியனை முருகனாகக் கூறுகின்றன. கொக் கரக் கோ என்று சேவல் கூவும். இதை கொக்கு அறு கோ என விரித்துப் பொருள் காண்பர். ஞானியர், கொக்கு எனும் சொல் மாமரத்தைக் குறிக்கும். போரின் இறுதியில் மாமரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹரித்து, சேவலும் மயிலுமாகக் கொண்ட கோ என்பது இதன் பொருளாகும்.