பதிவு செய்த நாள்
09
ஜன
2018
03:01
அமைதியான மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!
கடந்த மாதத்தை விட கூடுதல் பலன் எதிர்பார்க்கலாம். உங்கள் நட்புக்கிரகமான சூரியன் 11-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. சுக்கிரன் பிப்.6- வரையும், புதன் பிப். 7- வரையும் நற்பலன் கொடுப்பர். கேது மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். இதனால் எந்த ஒரு செயலையும் துரிதமாக செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் நன்மையும், ஆதாயபலனும் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்தபந்தம் வருகை இருக்கும்.
குருவால் மன வேதனை, நிலையற்ற தன்மை ஏற்படலாம். வீண் விரோதத்தை உருவாக்குவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சாதகமாக உள்ளது. இதனால் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் பெண்களின் ஆதரவு இருக்கும். ஜன. 21-க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஜன.22,23-ல் சகோதரிகளால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஜன.17,18,19-ல் உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் ஜன. 29,30-ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். தொழில், வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி நிதியுதவி எளிதாக கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஜன.21க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். எதிரி இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பிப்.2,3ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். கேதுவால் உங்கள் ஆற்றல் மேம்படும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பதவி உயர்வுக்கு தடை வராது. கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அரசு ஊழியர்கள் புதிய தெம்புடன் காணப்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஜன.15,16, பிப்.11,12ல் நன்மையான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பிப்.7-க்கு பிறகு பொறுப்பை
தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். விடாமுயற்சி எடுத்தால் தான் கோரிக்கை நிறைவேறும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். பிப்.6க்கு பிறகு விடாமுயற்சி மூலம் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மறைமுகப் போட்டியை சந்திக்க நேரிடலாம். அரசியல்வாதிகள் நல்ல பணப்புழக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஜன.31, பிப். 1-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். புதனால் கல்வி வளம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவீர்கள். பிப். 7-க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகலாம். கால்நடை வகையிலும் லாபம் காண முடியாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். அக்கம்பக்கத்தினரால் நன்மை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* நல்ல நாள்: ஜன.15, 16,17, 18, 19,22,23,26, 27, 28, பிப்.2,3,4,5,11,12
* கவன நாள்: பிப்.6,7 -சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:- 2,7 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
● பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய் தீபம்