மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) முயற்சிக்கு ஏற்ற வளர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2018 05:04
உழைப்பால் உயர்ந்த உத்தமராக திகழும் மகர ராசி அன்பர்களே!
தமிழ் புத்தாண்டின் பிற்பகுதியில் அதிக நன்மை கிடைக்கும். குரு பகவான் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமற்ற நிலையே என்றாலும், அவரது 5-ம் இடத்துப் பார்வையால் ஓரளவு நன்மை உண்டாகும். 2018 அக். 5ல் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவது உயர்வான நிலை. அவரால் பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். 2019 பிப். 10ல் 12-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவது நல்லதல்ல. ராகு 7-ம் இடமான கடகத்தில் இருப்பதால் இடப்பெயர்ச்சி, அவப்பெயரை சந்திக்க நேரலாம். 2019 பிப். 13ல் ராகு 6-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் முயற்சியில் வெற்றி உண்டாகும்.
கேது உங்கள் ராசியில் இருப்பதால் காரிய தடை, உடல் உபாதை ஏற்படலாம். 2019 பிப். 13ல் 12-ம் இடத்திற்கு மாறுவதால் வீண் விரயம் ஏற்படலாம்.
சனிபகவான் 12-ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் வெளியூர் பயணம் ஏற்படும். எதிரி தொல்லை குறுக்கிடும். ஆனால் சனியின் பார்வை பலத்தால் நன்மை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் முயற்சிக்கேற்ப வாழ்வில் வளர்ச்சி காண்பீர்கள்.
2018 ஏப்ரல் – செப்டம்பர் பொன், பொருள் சேரும். முயற்சியில் குறுக்கிடும் தடைகளை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். புதிய வீடு, மனை வாங்க நினைப்பவர்களுக்கு விடாமுயற்சி தேவைப் படும். குருவின் 5-ம் இடத்து பார்வையால் திடீர் வருமானம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம். எனவே கூடுதல் கவனம் தேவை. வேலைப் பளுவும், வீண் அலைச்சலும் அவ்வப்போது இருக்கும். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணத்தால் ஓரளவு ஆதாயம் எதிர்பார்க்கலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டிய திருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆனாலும் குருவின் 5-ம் இடத்துப்பார்வை மூலம் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகள் சீரான பலன் பெறுவர். மானாவாரி பயிர்களில் கூடுதல் மகசூல் எதிர்பார்க்கலாம்.
பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர். உங்களால் குடும்பம் சிறப்பு அடையும். பணிபுரியும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குருவின் 5-ம் இடத்துப்பார்வையால் சுபநிகழ்ச்சி கைகூடும்.
2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். திட்டமிட்டபடி சுபவிஷயம் நடந்தேறும். கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். வீட்டிற்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். டிசம்பர், ஜனவரி மாதங்களில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
பிப்.10 க்கு பிறகு குருவால் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். பதவி, சம்பள உயர்வுக்கு தடையில்லை. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பிப்.10க்கு பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். 2019 பிப்.13க்கு பிறகு புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிப்.10க்கு பிறகு கூடுதல் அக்கறை தேவைப்படும். புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டிய திருக்கும். பிப்.13க்கு பிறகு புதிய பதவி பெற வாய்ப்புண்டு.
மாணவர்கள் கல்வியில் வளர்ச்சியடைவர். ஆசிரியர்களின் ஆலோசனை துணைநிற்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். பிப். 10க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கும். பிப். 13க்கு பிறகு சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குருபகவானின் 9-ம் இடத்து பார்வை மூலம் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிப்.10க்கு பிறகு எதிலும் பொறுமை, நிதானம் தேவை. வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை வரலாம்.
பரிகாரம்: * சனியன்று லட்சுமிநரசிம்மருக்கு துளசிமாலை * ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு * வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு அர்ச்சனை
மேலும்
தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2023 முதல் 13.4.2024 வரை) »