பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
04:07
மற்றவர் துயரை போக்க முயலும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் சீரான முன்னேற்றம் காண்பீர்கள். கடந்த காலத்தில் பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்ததால் ஏற்பட்ட பாதக பலனை சனிபகவான் முறியடித்து உங்களை பாதுகாத்து இருப்பார். சூரியன், புதன் ஆகியோரால் நன்மை உண்டாகும். சுக்கிரன் ஆக. 2 வரை நற்பலனைக் கொடுப்பார். தற்போது சனி பகவான் 3-ம் இடத்தில் இருப்பதால் செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தந்து கொண்டு இருக்கிறார். தற்போது குருபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்படுத்துவார்.
சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவை பூர்த்தி ஆகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியனால் நினைத்தது நிறைவேறும். பொன், பொருள் சேரும்.
குடும்பத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். உங்கள் செல்வாக்கு வெளியே எப்படி இருந்தாலும் வீட்டில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். சகோதரிகளின் ஆதரவு இருக்கும். அவர்களால் நற்சுகம் கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 20,21 ஆக. 16 ல் அவர்களால் நன்மைகள் கிடைக்கும். ஜூலை 17, ஆக. 12,13-ந் தேதிகளில் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆக. 10,11ல் எதிர்பாராத நன்மை நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
தொழில், வியாபாரத்தில் குரு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் தொழிலில் மந்த நிலை ஏற்படலாம். ஆனால் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். சூரியன் மற்றும் புதனால் வளர்ச்சி தடைபடாது. பகைவர்களின் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஆக.1,2 ஆகிய நாட்களில் அதிர்ஷ்டவசமாக வருமானம் கூடும். ஜூலை 18,19,22,23,24, ஆக.14,15 ல் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆக. 2 க்கு பிறகு காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பாராமல் உழைக்க நேரிடும். ஜூலை 30,31ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டு
காண்பர். நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு தேவையான பணம் கிடைக்காமல் போகலாம். காய்கறி, கீரை வகைகளில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது. பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். வாகன சுகம் உண்டாகும். சொந்தபந்தம் வருகை இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நிம்மதியான சூழல் அமையப் பெறுவர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஜூலை 25,26 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
* நல்ல நாள்: ஜூலை 17, 20,21,25,26 ஆக.1,2, 3,4,5,10,11,12,13,16
* கவன நாள்: ஆக. 6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7,9.
* நிறம்: பச்சை, சிவப்பு
பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனை வழிபட்டு துவரை தானம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை
● தேய்பிறை அஷ்டமிஅன்று பைரவருக்கு வடை மாலை