பதிவு செய்த நாள்
14
செப்
2018
12:09
கடமையில் பொறுப்புடன் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரன், சனி மாதம் முழுவதும் நற்பலன் தர இருக்கின்றனர். அதோடு புதன் அக்.3க்கு பிறகும், குரு அக்.4க்கு பிறகும் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். எடுத்த முயற்சியை வெற்றிகரமாக முடிக்கலாம். கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட பொருள் விரயம் மறையும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் கூடும். புதனால் அரசு வகையில் இருந்த பிரச்னை அக்.3க்கு பிறகு மறையும். அக்.4ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
உறவினர்களிடம் சுமுகநிலை உண்டாகும். புதிய உறவினர்களின் அறிமுகமும், அவர்களால் உதவியும் கிடைக்கும். புதனால் அக்.3க்கு பிறகு தம்பதியிடையே அன்பு பெருகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பும், வருமானமும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். செப்.27,28ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் சனிபகவான் முயற்சிக்கேற்ப வெற்றியை தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று திகழ்வீர்கள். சூரியனால் பொருளாதார வளம் சிறக்கும். புதனால் பகைவர்கள் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையில் உள்ள அனுகூலமற்ற போக்கு முதலியன அக்.3க்கு பிறகு மறையும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வியாபாரத்தை விரிவுப்படுத்தலாம்.
கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மஞ்சள், பாசி பயறு வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் காண்பர். செப்.17,18,19, அக்.15,16ல் எதிர்பாராத வகையில் வருமானத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. பகைவர்களை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உண்டாகும். அக்.2,3,6,7ல் பண விரயம் ஆகலாம். முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் ஞாபக மறதியால் பின்னடைவுக்கு ஆளாகலாம். அக்.3க்கு பிறகு புதன், குரு சாதகமாக இருப்பதால் நிலைமை சீராகும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.
கலைஞர்கள் சிறப்பான பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தங்கள் தடையின்றி கையெழுத்தாகும். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் மனதிருப்தியுடன் செயலாற்றுவர். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொண்டர் மத்தியில் செல்வாக்கு கூடும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைக் காணலாம். காய்கறி, பழ வகைகள், மானாவாரி பயிர்கள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.
பெண்கள் எதிலும் பொறுமையுடன் விட்டு கொடுத்து போகவும். ஆனால் சுக்கிரன் சாதகமான நிலையில் உள்ளதால் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அக்.3க்கு பிறகு அண்டை வீட்டாருடன் இணக்கமான நிலை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது.
பணப்புழக்கம் அதிகரிக்கும். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை பலப்படும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. அக்.8,9ல் புத்தாடை, ஆபரணங்கள் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். செப்.20,21, அக்.17ல் விருந்து விழா என சென்று வர வாய்ப்புண்டாகும். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ராகுவால் சிலர் வெளியூரில் தங்க நேரிடலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
* நல்ல நாள்: செப்.17, 18, 19, 20, 21, 27, 28, 29, 30, அக்.1, 4, 5, 8, 9, 15, 16, 17
* கவன நாள்: செப்.22, 23, 24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 9 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்:
● வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை
● சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை