மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குழந்தை பாக்கியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2019 04:04
மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் ஏப்.16ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் மே7ல் சாதகமான இடமான மேஷத்திற்கு வருகிறார். புதன் ஏப்.27ல் இருந்து மே12 வரை நன்மை தருவார். மற்றும் ராகுவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். புதன் ஏப்.26க்கு பிறகு நன்மைகளை வாரி வழங்குவார். அதுவரை முக்கிய முடிவுகளை சிந்தித்தே செயல்படுத்த வேண்டும். அதன்பின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஏப்.16 க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏப்.26,27,28ல் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.22,23ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே4,5ல் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். எனவே அப்போது சற்று விலகி இருக்கவும். மே6க்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். அண்டை வீட்டார் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்தவும். ஏப்.26 க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஏப்.19,20,21ல் பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். மே6 க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மே12க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.
தொழில், வியாபார முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அறிமுகம் இல்லாத பெண்களால் பிரச்னை ஏற்படலாம். ஏப்.24,25,29ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே8,9ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர் தொல்லை, அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு முதலியன ஏப்.26க்கு பிறகு மறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே12 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
கலைஞர்கள் உற்சாகமான பணியில் ஈடுபடுவர். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தம் எதிர்பார்த்தபடி கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மே6க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஏப்.26க்கு பிறகு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். தேர்வு முடிவு சாதகமாக அமையும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மே 6க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்களால் உதவி உண்டு.
பெண்கள் உற்சாக மனப்பான்மையுடன் செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்களும் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். ஏப். 26க்கு பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். மே 1,2,3ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். ஏப்.14, மே11ல் விருந்து, விழா என சென்று வருவர். சகோதரர் வழியில் பணஉதவி கிடைக்கும். மே12 க்கு பிறகு பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். உடல்நிலை அதிருப்தி அளிக்கும்.