பதிவு செய்த நாள்
02
பிப்
2016
01:02
மலையும் மலைசார்ந்த பகுதிகளும் குறிஞ்சி நிலம் எனப்படும். இந்நிலத்திற்குரிய கடவுளாக முருகன் விளங்குகிறார். இதையே குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்கிறோம். முருகனின் ஐந்தாம் படைவீடாக குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணி அமைந்திருக்கிறது. பொதுவாக, குன்றுதோறாடல் என்பது முருகன் கோவில் கொண்டிருக்கும் மலைகள் அனைத்தையும் குறிக்கிறது. அருணகிரிநாதர் தன் திருப்புகழில் குன்றுதோறாடல் என்று பல தலங்களைக் குறிப்பிடுகிறார். வரையிடங்களில் சிறந்தது தணிகைமால் வரையே என்று கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் குறிப்பிடுகிறார். திருத்தணியே குன்று தோறாடல் தலங்களில் சிறந்ததாகும். அருணகிரி நாதர் வள்ளிமலை, மயிலம், விராலிமலை, குன்றக்குடி, திருச்செங்கோடு, கதிர்காமம், கயிலை, திருக்கழுக்குன்றம், ரத்தினகிரி, திருச்சி, விநாயகமலை, கொல்லிமலை, ராஜகம்பீரன் மலை, கொங்கணகிரி, கழுகுமலை, பிரான்மலை, பொதிகைமலை, திரிகோணமலை ஆகிய தலங்களையும் குன்றுதோறாடல் என்றே குறிப்பிடுகிறார்.