பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
03:04
சிவபெருமான் நடனமிடுவதால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்றும், அவரது ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அரும் செய்யவே எனவும் திருமுறைகள் கூறுகின்றன.
பல தலங்களில் பலபல வகையான ஆடல்களை அவர் நிகழ்த்தியிருந்தாலும் மிகவும் போற்றப்படுவது எட்டு வகையான தாண்டவங்களே. பரத நாட்டியத்தை உலகுக்குக் கொடுத்த பரத முனிவர் 108 வகையான ஆடல்களை இறைவன் எம்பெருமான் ஆடியிருப்பதாகக் கூறுகிறார். அவையே தாண்டவ பேதங்கள் எனவும், கர்ணங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. தனது ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வகைச் செயல்களைச் செய்கிறார் எம்பிரான். என்னென்ன வகையான தாண்டவங்கள் அல்லது நடனங்களை அவர் ஆடி நம்மை ஆட்டுவிக்கிறார்.
காளிகா தாண்டவம்: அன்னை சிவகாமி காளியாகக் கோபம் கொண்டு நிற்கையில் அவளது கோபத்தைத் தணித்து தானும், அவளும் வேறு வேறல்ல என்பதை உலக்குக்கு உணர்த்த ஆடிய தாண்டவமே காளிகா தாண்டவம். இந்தத் தாண்டவக் கோலத்தில் இறைவன் எட்டுக் கைகளுடன் காட்சி அளிக்கிறார். வலக்கரங்களில் உடுக்கை, மணி, அக்கினி ஆகியவற்றை ஏந்தியும், இடக்கைகளில் அபய ஹஸ்தமும், கஜ ஹஸ்தமும் காட்டியபடியும் திருக்காட்சி தருகிறார். இந்த வகை நடனம் திருநெல்வேலியில் தாமிர சபையில் காணப்படுகிறது. ரத்தின சபையாம் திருவாலங்காட்டிலும் கூட காளிகா தாண்டவ ரூபத்திலேயே இறைவன் காட்சி அளிக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்த நடனக்கோலத்தில் இறைவனை தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி, வாழ்வில் இன்பம் மலரும். கடன் தொல்லைகள், தாழ்வு மனப்பான்மை ஆகியவை போய்விடும் என்று கூறுகின்றன ஆகமங்கள்.
சந்தியா தாண்டவம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலக நன்மைக்காக சிவபெருமான் அதனை அருந்திவிட்டார். விஷத்தின் வீரியத்தால் அவர் செயலிழந்து உறைந்து அன்னை பார்வதி தேவியின் மடியில் சாய்ந்து கொண்டார். அந்த சில கணங்கள் பூமி அப்படியே நின்று விட்டது. எந்த உயிருக்கும் மூச்சுக்காற்றுகூடக் கிடைக்கவில்லை உலகைக் காப்பாற்ற தேவர்கள், சிவபெருமானை மயக்கம் தெளிந்து எழுமாறு மனமுருகி வேண்டினார். மாலை நேரத்தில் மெல்லக் கண் மலர்ந்தார் நீலகண்டர். உலகம் மீண்டும் உயிர் கொண்டது. மகிழ்ச்சியில் மூழ்கிய தேவர்களின் விருப்பத்திற்கேற்ப பிரதோஷ நேரத்தில் இறைவன் ஆடிய நடனமே சந்தியா தாண்டவம் ஆகும்.
உமா தாண்டவம்: அன்னையும் அப்பருமாக சேர்ந்து ஆடும் கோலம் உமா தாண்டவம் எனப்படுகிறது. இந்தக் கோலத்தில் அபஸ்மார புருஷனை மிதித்தப்படி ஆடுகிறார் எம்பிரான். ஒரு கரம் கஜஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டுகிறது. காத்தல் தொழிலை இந்தத் தாண்டவம் குறிப்பதாகக் கருதுகிறார்கள். உலகம் நிலை பெறவும் இந்த நடனமே காரணம் என்று சொல்வோரும் உண்டு. இறையனாரை இந்தக் கோலத்தில் மனக்கண்ணால் கண்டு தரிசித்தாலே தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவும்.
ஊர்த்துவ தாண்டவம்: தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கோபம் கொண்டு அன்னை உமை, காளியாக மாறினாள். சிவனை விட்டு விலகியதால் மேலும் உக்கிரம் கொண்டாள். அதனால் தில்லை வாழ் மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தனர். காளியை மீண்டும் சிவகாமியாக மாற்ற எண்ணியும், அதனால் உலகுக்கு அருள் செய்யவும் திருவுளம் கொண்டார் ஆடல் வல்லான். அதனால் காளியோடு போட்டியிட்டு ஆடினார். காளியின் நடனத்துக்கும். சிவனின் நடனத்துக்கும் ஏற்றத்தாழ்வே இல்லாமல் இருந்தது அப்போது தனது காதணியை கீழே விழச் செய்து அதனைத் தன் காலாலேயே தூக்கி மீண்டும் தனது காதில் அணிந்தார். அந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் எனப்படுகிறது. அதனால் சிவபெருமானுக்கு ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
கவுரி தாண்டவம்: தாருகா வனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் வந்தார் இறைவர். மகா விஷ்ணுவும் மோகினி அவதாரம் எடுத்து வந்தார். அப்போது இருவரும் இணைந்து ஆடிய நடனம் இது. எப்போதும் தன்னுடனே இணைந்து ஆடும் இறையனாரின் மற்றொரு நடனத்தை தான் மட்டும் காண ஆசை கொண்டாள் கவுரிதேவி. அவளுக்காக கைலாயத்தில் இறைவன் ஆடிக்காட்டியதே கவுரி தாண்டவம் எனப்படுகிறது. இந்தத் தாண்டவம் ஆடும் போது வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கவுரியும் இருப்பர். ஆனந்த தாண்டவத்தில் இல்லாத கோலமாக ஒரு கையில் பாம்பு காணப்படும். அதுவே கவுரி தாண்டவம் எனப்படும். கஜ சம்ஹார தாண்டவம்: தாருகா வனத்து முனிவர்களின் கர்வத்தை ஒரு யானையாக மாற்றினார் சிவபெருமான். அந்த யானை மதங்கொண்டு எம்பெருமானை நோக்கி ஓடி வந்தது. அந்த ஆணவ யானையை அழித்து, முனிவர்களுக்கு நல்லருள் தந்த தாண்டவமே கஜ சம்ஹார தாண்டவம் எனப்படுகிறது.
ஆனந்த தாண்டவம்: பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இறைவன் ஆடிய திருநடனமே ஆனந்த தாண்டவம். ஐந்து தொழில்கள், ஐந்து பூதங்கள், ஒரு நாளின் ஐந்து பொழுதுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது இந்த நடனம். இதனைக் களி நடனம் என்றும் சொல்வார்கள். தில்லையில் நடராஜ ரூபமாக இதனை ஆடுவதால் அவருக்கு தில்லைக்கூத்தர், அம்பலக்கூத்தர் என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. மிகச் சிறந்த தாண்டவமாக ஆனந்த தாண்டவம் சொல்லப்படுகிறது. இந்த நடனத்தை மூலமாகக் கொண்டே பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தை வடிவமைத்தார் எனவும், பரத முனிவர் பரத சாஸ்திரத்தை செய்தார் எனவும் சம்ஹிதைகள் கூறுகின்றன. இந்தத் தோற்றத்தில் இறைவனை தரிசிக்க வாழ்வில் இன்பம் நிலைக்கும்.
அஜபா தாண்டவம்: அன்னையின் மூச்சுக்காற்றுக்கேற்ப இறைவன் அசைந்து ஆடும் தாண்டவமே அஜபா நடனம் என்று தனிப்புகழ் பெற்று விளங்குகிறது. திருவாரூரில் இந்த நடனம் ஆடப்பட்டதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவன் அசைந்து அசைந்து மிகவும் பொறுமையாக இந்த நடனத்தை ஆடியதால் இதற்கு அஜபா நடனம் என்று பெயர் வந்தது என்று கூறுகிறார்கள். இந்த நடனத் திருக்கோலத்தில் சிவபெருமானை தரிசித்தால் கணவன் - மனைவி ஒற்றுமை ஓங்கும், வழக்கு வியாஜ்ஜியங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். எட்டுத் தாண்டவங்களையும் ஆடி, மக்களுக்கு அருள் செய்து ஆட்கொள்ளும் இறைவனது திருவடியைப் பணிவோம்.
முதல் ஏழு தாண்டவங்களும் தான் சப்த ஸ்வரங்களை உலகுக்கு அளித்தன என்று கூறுகிறார்கள். ஆடத்தொடங்கும் போது ஆரோஹணமும் ஆடி, மூடிக்கையில் அவரோஹணமும் ஆக, ஸரிகமபதநி என்று ஏழு ஸ்வரங்களும் நமக்குக் கிடைத்தன. அஜபா நடனம் பல ராகங்களின் பிறப்பிடம் எனவும் கூறப்படுகிறது. இசை, ஆடல் போன்ற நுண் கலைகளை பக்தியோடு வளர்த்து அதனை மக்களுக்கு அர்ப்பணித்த முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.