பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
04:04
வரும் ஏப்.15ம் தேதி ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. பண்பாடே வடிவெடுத்துள்ள இலக்கியங்களுள் ஸ்ரீமத் ராமாயணம் தலைசிறந்ததாகக் திகழ்கிறது. குழந்தை ஒன்று ராமாயணம் கேட்டால் உற்சாகம் கொள்கிறது. பாமரன் கேட்டால் பண்பாடு அடைகிறான். பண்டிதன் கேட்டால் சிந்திக்கும் ஆற்றலைப் பெறுகிறான். ஆத்ம சாதகன் கேட்டால் ஞானத்தை உறுதிப்படுத்திக்கொள்கிறான். ராமாயண காவிய ஆராய்ச்சியால் மனம் தெளிவடைகிறது. வாழ்நாள் முழுக்க நமக்குத் துணையிருப்பது ராமாயண மகாகாவியம்.
அறத்தின் வழி நிற்பவர்களுக்கு சோதனைகள் அதிகம். அவற்றை முறையாக எதிர்கொள்பவன் வாழ்க்கையில் வெற்றியடைகிறான். இது ராமாயணம் புகட்டும் பாடம். காமமும் பொருளாசையும் மனிதனை கெட்ட வழியில் தூண்டுகின்றன. இவ்விரண்டில் காமத்தை அடிப்படையாகக்கொண்டு உருவெடுத்தது ராமாயணம். அயோத்தி, கிஷ்கிந்தை, இலங்கை ஆகிய மூன்று நகரங்களும் தலைமைப் பட்டினங்கள். அயோத்தி மன்னன் தசரதன் தன் மனைவிகளான கவுசல்யா, சுமித்திரை, கைகேயி ஆகியோரில் øகேயியிடம்தான் அளவுகடந்த அன்பு காட்டினான். அதன் விளைவாக தீங்கு வடிவெடுத்தது. கிஷ்கிந்தையில் காமம் அதிகரித்திருந்தது. அதன் விளைவாக வாலியும், சுக்ரீவனும் கருத்து வேறுபாடு கொண்டு சிறிது காலம் பிரிந்திருந்தார்கள். லங்காபுரியிலோ இராவணன் முற்றிலும் காம நோய்க்கு வசப்படிருந்தான். இதன் விளைவாக இராவணனும் அவனது உற்றார், உறவினர்களும் அழிந்துபோயினர்.
இராவணன் வரலாறையும், அவனுக்கு ஏற்பட்ட சாபங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். கிருதயுகத்தில் பிரம்மதேவனுடைய மகன் புலஸ்தியர், மேருமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அநேக கன்னிகைகளும் அப்சரஸ் பெண்களும் அடிக்கடி வந்து புலஸ்தியருடைய தவத்திற்கு இடையூறு செய்தனர். இனி என் கண்ணில் படுகிற பெண் கர்ப்பம் தரிக்கக் கடவள் என்று சாபம் கொடுத்துவிட்டார். புலஸ்தியர்.
த்ருணபிந்து என்ற ராஜரிஷியின் மகள் புலஸ்தியர் இருக்கும் இடத்துக்கு சென்றுவிட்டாள். ரிஷியின் சாபம் பலித்துவிட்டது. அந்தப் பெண் புலஸ்தியரிடம் கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாள். அதற்கு புலஸ்தியர், பெண்ணே, நான் கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது. ஆனால் நான் வேதாத்யயனம் செய்வதைக் கேட்டு நீ வந்தபடியால், உனக்கு விச்ரவஸ் என்று பிள்ளை பிறப்பான் என்று அருளினார்.
விச்ரவஸ் வாலிப வயதையடைந்து, பரத்வாஜ் மகரிஷியின் மகளை மணந்தான். அவர்களுக்கு குபேரன் என்ற மகன் பிறந்தான். குபேரன் பல ஆண்டுகள் தவமியற்றி பிரம்மதேவனின் தரிசனத்தைப் பெற்றான்.
பகவன் லோக பாலஸ்த்வம்
இச்சேயம் விதத் ரக்ஷணம்
பிரம்ம தேவரே, நான் லோக பாலனாக இருந்து தனங்களுக்கு அதிபதியாக விரும்புகிறேன். என்று வரம் கேட்டான். அவ்வாறே அருளிய பிரம்மா, சூரியனைப்போல ஜொலிக்கும் ஒரு புஷ்பக விமானத்தையும் கொடுத்தார். குபேரன் இலங்கையிலுள்ள திரிகூடம் என்ற இடத்தில் வசித்துக் கொண்டிருந்தான்.
இந்த சமயத்தில் சுமாலி என்று அசுரன் தன் மகள் கைகஸியை அழைத்து விச்ரவஸிடம் சென்று ஒரு மகனை யாசிக்கும்படி சொன்னான்.
கைகஸி விச்ரவஸிடம் சென்ற நேரம் பிரதோஷ நேரம். விச்ரவஸ் தியானத்தில் இருந்தபோது அவரை பலவந்தமாக இழுத்து சேர்ந்தாள். பிரதோஷ வேளையில் சேர்ந்ததால் பத்துத் தலைகளுடன் கூடிய இராவணன் பிறந்தான். அடுத்து கோரமான ரூபத்தோடு கும்பகர்ணனும் சூர்ப்பனகையும் பிறந்தார்கள். கடைசியாக தர்மாத்மாவான விபீஷணன் பிறந்தான்.
கைகஸி குபேரனைப் போல இருக்கவேண்டுமென்று தன் பிள்ளைகளையும் தவம் செய்யச் சொன்னாள். இராவணன் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். ஒவ்வொரு ஆயிரம் ஆண்டின் முடிவிலும் தன் தலைகளில் ஒன்றை அறுத்து ஹோமம் செய்தான். பிரம்மதேவர் தரிசனமளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
பகவன் ப்ராணினாம் நித்யம்
நான்யத்ர மரணாத்பயம்
நாஸ்தி மிருத்யுமை: சத்ரு:
அமரத்வம் மஹம் வ்ருணே.
ப்ரபோ, உயிர்களுக்கு மரணமே பயமுண்டாக்கக் கூடியது. அதுவே சத்ரு. ஆகையால் நான் இறக்கவே கூடாது என்று கேட்டான். இதைக்கேட்ட பிரம்மா, இராவணா, உலகில் பிறந்த எல்லாருக்கும் மரணம் வந்தே தீரும். எனவே குறிப்பிட்ட சிலரிடமிருந்து மரணம் ஏற்படக்கூடாது என்று கேள். மரணமே வராது என்று என்னால் வரம் கொடுக்க இயலாது என்றார்.
உடனே இராவணன் யோசித்து, தேவர்கள், நாகர்கள், யட்சர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராட்சதர்கள், சுபர்ணர்கள் ஆகியோரால் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. மனிதர்களைப் பற்றிய கவலை எனக்கில்லை என்று கேட்டான். பிரம்ம தேவரும் அப்படியே வரமளித்தார்.
இராவணன் தம்பியான கும்பகர்ணனும் தேவர்கள் அழிந்துபோக வேண்டுமென்று கடுமையான தவம் செய்தான். அவனுடைய தீய எண்ணத்தையறிந்த பிரம்மாவின் பத்தினியான சரஸ்வதிதேவி கும்பகர்ணன் நாக்கில் அமர்ந்தாள். கும்பகர்ணன் வரம் கேட்க நிர்தேவத்வம் என்று ஆரம்பித்தவுடனேயே, அதை நித்ரத்வம் என்று சொல்லவைத்தாள். கும்பகர்ணன் எல்லையற்ற தூக்கத்தில் ஆழ்ந்த போது அவனுடைய தாய் கைகஸியின் வேண்டுகோளுக்கிணங்கி ஆறுமாதம் தூக்கம்; ஆறுமாதம் விழிப்பு என்று வரத்தை சற்று மாற்றினார் பிரம்மா.
பிரம்மாவிடம் வரம்பெற்ற இராவணன் முதலில் குபேரனிடமிருந்து இலங்கையையும், புஷ்பக விமானத்தையும் அபகரித்தான்.
ஒரு சமயம் கயிலை மலையையே பெயர்த்தெடுக்க முயன்றான். அப்போது நந்திகேஸ்வரர் தடுக்க, இராவணன் அகம்பாவம் கொண்டு நந்திகேஸ்வரரை குரங்கு என்று ஏளனம் செய்தான். உடனே நந்திகேஸ்வரர் நீ என்னை குரங்கென்று கேலி செய்தாய். அந்த குரங்குகளே உனது குலத்தையும் நகரையும் நாசமாக்கும் என்று சாபமிட்டார்.
ஒரு சமயம் குசத்வஜர் என்ற மகரிஷியின் மகள் வேதவதி மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய தவம்புரிந்தாள். அவளைப் பார்த்த இராவணன் பலாத்காரம் செய்ய முயன்றான். இதைப் பொறுக்கமுடியாமல் அவள் பிராணத்தியாகம் செய்துகொண்டாள். அப்போது அவள், பாவியான உன்னால் நான் தீண்டப்பட்டேன். உன்னை வதம் செய்வதற்காகவே நான் மறுபடியும் பிறப்பேன் என்றாள். அதன் படியே அவள் சீதையாக அவதரித்தாள்.
பின்னொருசமயம் புஞ்சிதஸ்கலை என்ற அப்சரப்பெண் பிரம்மலோகத்தில் சேவை செய்ய சென்றபோது இராவணன் அவளை அலங்கோலப்படுத்தினான். அவள் பிரம்மாவிடம் முறையிட, அவர் இராவணனுக்கு சாபம் கொடுத்தார்.
அந்நிய ப்ரப்ருதி யாமன்யாம்
பலான் நாரீம்ர கபிஷ்யஸி
ததா தே சததா மூர்த்தா
பவிஷ்யதி நசம்சய
இந்த க்ஷணம் முதல் நீ எந்த பெண்ணையாவது பலாத்காரப் புணர்ச்சி செய்தால் அப்பொழுதே உன் தலை சுக்குநூறாக சிதறிப்போகும் என்றார். இந்த சாபத்திற்கு பயந்து தான் இராவணன் சீதையை பலாத்காரம் செய்யவில்லை.
இலங்கையில் இராவணன் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தர்மகாரியங்கள் நடைபெறவில்லை. யாக யக்ஞங்கள் நடக்கவில்லை. சூரிய, சந்திரர்கூட தன் உத்தரவுப்படிதான் நடக்கவேண்டுமென்று இராவணன் ஆணையிட்டான். இதை கம்பர்.
கறங்கு கால் புகா கதிரவன் ஒளிபுகா மறலி
மறம் புகாதினி வானவர் புகாரென் கைவம்பே
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினுஞ் சிதையா
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை நின்ற கத்தின்
என்பார். வாழ்க்கையின் அஸ்திவாரமான தர்மத்திற்கு இடமில்லாதபோது நிச்சயமாக இலங்கை அழிந்துபோகும்.
இந்த இராவணனை எப்படி அழிப்பது? பிரம்மாவின் வரம் குறுக்கே நிற்கிறதே. எனவே தேவர்களும் முனிவர்களும் ஸ்ரீமந் நாராயணனை சரணடைந்தார்கள். மனிதன் நீங்கலாக வேறு ஒருவராலும் இராவணனைக் கொல்லமுடியாது. அவனைக் கொல்லக்கூடிய மனிதன் எங்கே இருக்கிறான். பகவானே மனிதனாக அவதாரம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
தேவர்களே, பயம் வேண்டாம். உங்களுக்கு கெடுதல் செய்யும் இராவணனை அவனுடைய உற்றார் உறவினர், நண்பர் முதலான பரிவாரங்களோடு யுத்தத்தில் வதம் செய்து உங்களுக்கு நன்மை செய்கிறேன். நான் பூலோகத்தில் 11,000 ஆண்டுகள் அரசாட்சி செய்து தர்மத்தை ஸ்தாபிக்கிறேன் என்று ஸ்ரீமந் நாராயணன் வாக்குறுதி அளித்தார். உடனே பிரம்மா தேவர்களை பூவுலகில் வானரர்களாகப் பிறக்கும்படி உத்தரவிட்டார். மகாலட்சுமி சீதா தேவியாக அவதாரம் செய்ய சங்கல்பம் செய்துகொண்டாள்.
தேவேந்திரன் வாலியையும், சூரியன் சுக்ரீவனையும், அக்னிதேவன் நீலனையும், விச்வகர்மா நளனையும், அச்வினி தேவர்கள் மைந்தன், த்விதன் ஆகியோரையும், வருணன் சுக்ஷேணைனயும், வாயுதேவன் ஹனுமனையும், பர்ஜன்யன் சரபனையும் உருவாக்க சங்கல்பம் செய்துகொண்டார்கள். இதற்கு முன்பாகவே பிரம்ம தேவனுடைய கொட்டாவியிலிருந்து ஜாம்பவான் என்ற கரடி அரசன் பிறந்திருந்தான். இவர்கள் எல்லாரும் மிகுந்த பலமுள்ளவர்கள். தேவர்களானபடியால் விரும்பிய வடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள். இவர்கள் எல்லாரும் இராவண வதத்திற்கு ஸ்ரீமந்நாராயணனுக்கு உதவி செய்வதற்காகப் பிறந்தார்கள். வாலி மட்டும் தர்ம காரியத்திற்கு விரோதமாக நடந்துகொண்டபடியால் ராமன் அவனை வதம் செய்யும்படி நேர்ந்தது.
ராமர் அவதரித்தவுடன் பூமாதேவி மகிழ்ச்சியால் பூரித்தாள். புனர்பூச நட்சத்திரமும் கடக ராசியும் சந்தோஷப்பட்டன. புனர்பூச நட்சத்திரத்துக்கு மரணயோகமே கிடையாது. சித்தர்களும், ஞானிகளும், தேவர்களும், யட்சர்களும், அவர்களுடைய மனைவிகளும் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள். தருமதேவதை மகிழ்ந்தது. கந்தவர்கள் இனிமையாகப் பாடினர். அப்சரப் பெண்கள் நடனமாடினர். தேவர்கள் துந்துபி முழங்க ஆகாயத்திலிருந்து மலர் மழை பொழிந்தது.