பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
02:04
திருமால் பாற்கடலில் பள்ளிகொண்டவர். துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை சாத்துவதும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரீதியானது. பிருந்தா எனும் பெயரும் துளசிக்கு உண்டு.
துளசியை பூஜிப்பதால் அஷ்ட ஐஸ்வர்யம், புத்திர சம்பத்து, நல்ல கணவன், புகழ், மோட்சம் என அனைத்தும் கிடைக்கும். துளசியைக் கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவை அர்ச்சிப்பதால் நான்கு லட்சம் முறை நமஸ்காரம் செய்த பலன் கிடைக்கும். ஒருமுறை அர்ச்சித்த துளசியை நீரில் அலம்பிவிட்டு மீண்டும் உபயோகிக்கலாம். துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஏகாதசி மற்றும் இரவு நேரங்களில் துளசியை பறிக்கக்கூடாது. துளசி செடிக்கு தண்ணீர் அளிப்பது மிகவும் புண்ணியம். இதை ஆண், பெண் என அனைவரும் செய்யலாம்.
அறிவியல் பயன்கள்: ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம். அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி. இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி. துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது. துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.
துளசி இலைகளை பச்சையாக மென்று தின்பதால் சளி நீங்கும். பனிக்காலத்தில் பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி தேநீர் அருந்தல், உடல் நலம் தரும். தாகம், சுரம், வயிறு உளைச்சல், மாந்தம் இவையெல்லாம் தூய துளசியினால் குறையும். தினமும் நான்கு துளசி இலை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வீட்டைச் சுற்றி துளசிச் செடி வளர்த்தால் கொசுக்கள் வராது. துளசி மணி மாலை அணியும் போது அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு பல நோய்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. சரும நோய்களுக்கு துளசி சிறந்த நிவாரணி. துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து. ஒரு மணி நேரம் ஊற வைத்து நீராட, பேன், பொடுகு தொல்லை நீங்கும். வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் முதலியவற்றுக்கும் துளசி அருமருந்தாகும்.
அனைத்து தாவரங்களுமே பகலில் கார்பன் டை ஆக்ஸைடு எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடுகின்றன. ஆனால், துளசி மாத்திரம் பகல், இரவு எந்நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் திறன் படைத்தது. இதனால், தூய காற்றை சுவாசித்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். இத்தனை சிறப்புகளுடைய துளசியை வளர்த்து, வணங்கி உண்டு உயர்வு பெறுவோம்!