பதிவு செய்த நாள்
28
ஜன
2017
03:01
என்னது... வில்லனுக்கு ஆலயமா என்று ஆச்சரியப்படுபவர்கள் ஏராளம், மகாபாரதத்தில் சகுனியின் பங்கு அதிகம். இவனும், துரியோதனனும் சேர்ந்து செய்த வில்லத்தனங்களை மறக்க முடியாது. இதில் முக்கிய வில்லனான சகுனிக்கு கேரளாவில் ஒரு கோவில் உள்ளது. கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகிலுள்ள பவித்ரீஸ்வரம் கிராமத்தில் மயம்கோட்டு மாலன்சரவு மலனாட என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சகுனி தான் பிரதான தெய்வம். தன் பாவங்களுக்காக மனம் வருந்திய சகுனி, இங்கு வந்து சிவனை பிரார்த்தித்ததாகவும், சிவன் சகுனிக்கு மோட்சம் அளித்ததாகவும் தல வரலாறு சொல்கிறது. இந்தக்கோவிலில் சகுனியின் அரியணை இருக்கிறது. இங்கு பூஜை எதுவும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இளநீர், கள், பட்டாடை வைத்து வணங்குகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் சகுனி வில்லனாக மாறினான் என கருதுபவர்கள் இவர்கள். பாண்டவர்களைத் தேடி சகுனி கவுரவர்களோடு வந்தான். அவர்களைக் கொல்வதற்காக இந்த இடத்தில் வைத்து, கவுரவர்கள் தங்கள் ஆயுதங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதனால் தான் இந்த இடத்திற்கு பகுத்தீஸ்வரம் என்று பெயர் வந்தது. அது மருவி பவித்ரீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிரந்த மூர்த்தி, புவனேஸ்வரி தேவி மற்றும் நாகராஜா விக்ரகங்கள் உள்ளன. இதன் அருகில் தான் துரியோதனனுக்கும் கோவில் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து இந்தக்கோவில் 65 கி.மீ., துõரத்திலும், கொட்டாரக்கராவிலிருந்து 16 கி.மீ., துõரத்திலும் உள்ளது. பவித்ரீஸ்வரத்திற்கு பஸ் வசதி உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு உற்சவம் நடத்தப்படும். அப்போது பல வித்தியாசமான வழிபாடுகள் நடக்கிறது.