பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
04:04
கள்ளம் கபடம் இல்லாத கன்னி ராசி அன்பர்களே!
உங்களுக்கு இந்த மாதம் புதன் ஏப். 26 முதல் மே12 வரை நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. சனிபகவானின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் அவர் உங்களுக்கு நன்மையை வாரி வழங்குவார். குறிப்பாக பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார்.
குடும்பத்தில் சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும். ஏப்.26க்கு பிறகு மனதில் இருந்த வேதனை, கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதன் பின் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியிடையே அன்பு பெருகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை சேரும். ஏப்.17,18 ல் பெண்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.14,மே10,11ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். அதே நேரம் ஏப்.24,25ல் உறவினருடன் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஏப்.26 வரை அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். புதனால் நல்ல முன்னேற்றம் காணலாம். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். பதவி உயர்வும் சிலருக்கு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வேலை விஷயமாக மனைவியை பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புண்டு. ஆனால் அரசு பணியாளர்களுக்கு வேலையில் அதிக அக்கறை தேவை. கோரிக்ககைள் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். மே8,9ல் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரத்தில் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு உழையுங்கள். ஆனாலும் தற்போது போதிய வருமானம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வெளியூர் பயணம் ஏற்படலாம். ஏப்.15,16,19,20,21, மே12,13,14ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஏப்.29,30ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஏப்.26க்கு பிறகு முயற்சியில் இருந்த தடைகள் மறையும். மே12க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். ராகுவால் சிலருக்கு பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஏப்.16க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் விஷயத்தில் சற்று ஒதுங்கி இருக்கவும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் ஏப்.26க்கு பிறகு சிறப்பான நிலையை அடைவர். புதனால் நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஏப்.26 முதல் மே12 வரை கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்கள் குருபகவானால் உறவினர் வகையில் வீண் பகையை சந்திப்பர். ஏப்.26க்கு பிறகு உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர் ஏப்.22,23ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மே1,2,3 சிறப்பான நாட்களாக அமையும்.
கடந்த மாதம் இருந்த அலைச்சல், அவப்பெயர், வயிறு தொடர்பான உபாதைகள் மறையும். செவ்வாயால் மே6க்கு பிறகு பயணத்தின் போது கவனம் தேவை.
* நல்ல நாள்: ஏப்.14,17,18,22,23,29,30,மே 1,2,3,8,9,10,11
* கவன நாள்: மே 4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்- 4,6
* நிறம்: பச்சை
* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
* வெள்ளியன்று லட்சுமிதாயார் தரிசனம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு