பதிவு செய்த நாள்
16
ஆக
2018
05:08
நல்லவர் கருத்தை பின்பற்றும் மீன ராசி அன்பர்களே!
சூரியன், செவ்வாய், கேது சாதகமான பலன் தர காத்திருக் கின்றனர். புதன் ஆக. 28 முதல் செப். 14 வரை நன்மை தருவார். சுக்கிரன் ஆக.31க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். இதனால் கையில் பணச்செழிப்பு அதிகமிருக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. பொதுவாக குருபகவான் மனவேதனை, நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். வீண் விரோதத்தை உருவாக்குவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது.
அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. எடுத்த முயற்சி வெற்றி அடையும். இஷ்ட தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆக. 28க்கு பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். ஆக.31க்கு பிறகு ஆடம்பர வசதி பெருகும். குடும்பத்தினர் செயல்பாடு வளர்ச்சிக்கு துணை நிற்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். ஆக.28,29,30ல் பெண்களால் இனிய அனுபவம் உண்டாகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.24,25ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப். 4,5ல் உறவினர்கள் வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலையில் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் பொறுமை யும் நிதானமும் தேவை. ஆக.28க்கு பிறகு அதிகாரிகளின் அனுசரணையும், சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். ஆக.21,22,23ல் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் தொழில், வியாபாரம் சிறப்படையும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக் கட்டைகள் விலகும். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். பகைவர் சதியை முறியடித்து வெற்றி கொள்வீர்கள். ஆக.28க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். செப்.8,9,10ல் எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்ப்பாடுகள் ஆக.31க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியோடு நற்புகழும் கிடைக்க பெறுவர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். சற்று உழைத்தாலே வெற்றிக்கான கதவு திறக்கும். இந்த மாதத்தை பொறுத்தவரை ஆக. 28 முதல் செப்.14 வரை கூடுதல் நன்மையை எதிர் நோக்கலாம். விவசாயிகள் போதிய வருமானத்தை காண்பர். நெல், கோதுமை, கரும்பு, சோளம், எள், கொள்ளு, கிழங்கு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை வகையிலும் ஆதாயம் வரும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்புண்டு. வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். குடும்பத்தோடு ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. ஆக.28க்கு பிறகு எதையும் சாதிக்கும் அபார ஆற்றல் பிறக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். செப்.11,12 ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும். செப். 2,3ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப்.14க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.
* நல்ல நாள்: ஆக.21,22,23,24,25,28,29,30, செப். 2,3,8,9,10,11,12
* கவன நாள்: ஆக.17,18,செப்.13,14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: பச்சை, சிவப்பு
பரிகாரம்:
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
● சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு பானகம்